தண்ணீரில் மிதக்கக்கூடிய உலகின் ஆகப் பெரிய சூரியசக்தி தகடு கட்டமைப்பு சிங்கப்பூரின் தெங்கா நீர்த்தேக்கத்தில் பொருத்தப்படவுள்ளது. இதனை வடிவமைத்துத் தயாரிக்க முற்படும் நிறுவனங்களின் முன்மொழிவுத் திட்டங்களைப் பொதுப் பயனீட்டுக்கழகம் நாடவுள்ளது.இதுபோன்ற மேலும் இரண்டு சூரியசக்தி தகடு கட்டமைப்புகள் பிடோக், லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கங்களிலும் இவ்வாண்டின் பிற்பாதியில் அமைக்கப்படும்.
இந்தத் திட்டத்தைச் சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி ‘இக்கோஸ்பெரிட்டி’ மாநாடு 2019ல் அறிவித்தார். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல், வளப் பற்றாக்குறை உள்ள உலகத்தில் பொருளியல் சீரமைப்பைக் கட்டிக்காத்தல் ஆகியவற்றுக்கான பன்முனை உத்தியைத் திரு மசகோஸ் விவரித்தார்.