‘1 ராஃபிள்ஸ் பிளேஸ்' -இல் உள்ள கட்டுமான சாக்கடைப் புழையில் விழுந்ததன் காரணமாக 26 வயது ஆடவர் ஒருவர் மரணமடைந்தார்.
சென்ற ஞாயிற்றுகிழமை நடந்த இச்சம்பவத்தில் இறந்த அந்த ஆடவர் ‘ஆல்ஃப்ரேஸ்கோ பார் 1 -ஆல்டிட்டியூட்’ எனும் மதுபான கூடத்தில் பகுதி நேர பாதுகாவலராகப் பணிபுரிந்தார்.
காவல் துறையும் மனிதவள அமைச்சும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.
சிங்கப்பூர் ஆடவரான அவர் அங்குள்ள கட்டுமான சாக்கடைப்புழையில் கிடந்ததாகக் காவல் துறை ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தது.
கட்டடத்தின் வெளிப்பத்தைச் சுத்தம் செய்யும் வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்த நான்கு மீட்டர் ஆழம் உள்ள பள்ளத்தில் அவர் விழுந்ததாக மனிதவள அமைச்சுத் தெரிவித்தது.
இச்சம்பவத்தில் முறையற்ற செயல்களுக்கன அறிகுறிகள் எதுவும் இல்லை என்று ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நம்புகிறது.
சென்ற ஞாயிற்றுகிழமை காலை மணி 1.26க்கு இச்சம்பவத்தைப் பற்றிய தகவலைப் பெற்ற காவல் துறை அது இயற்கையற்ற ஒரு மரணமாக குறிப்பிட்டுள்ளது.
63 மாடிகள் கொண்ட கட்டடத்தின் கூரையில் அமைந்துள்ள இந்த ‘1-ஆல்டிட்டியூட்’ மது கூடம் உலகிலேயே ஆக உயர்ந்த இடத்தில் அமைந்துள்ள ‘ஆல்ஃப்ரேஸ்கோ பார்’-ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நடந்த நான்கு மணி நேரத்திற்கு பின் கூரையில் அமைந்துள்ள மதுபான கூடம் சீர் படுத்துதல் வேலைகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டதென அதனின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஞாயிற்றுகிழமையன்று பதிவுச் செய்யப்பட்டது.
அதில் உள்ள ‘க்லப்’ பொதுமக்களுக்காக தொடர்ந்து திறக்கப்படும் என்றும் அந்த ஃபேஸ்புக் பதிவு குறிப்பிட்டது.