சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய $20 நோட்டுகளை நேற்று முதல் வங்கிகளில் பொதுமக்கள் வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
பல பிரதான வங்கிகளில் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று பல நோட்டுகளை வாங்கியோரில் சிலர் அவற்றை இணையத்தில் விற்கத் தொடங்கியுள்ளனர்.
பல வங்கி கிளைகளில் ஒரே நாளில் நோட்டுகளின் இருப்பு காலியாகி விட்டது.
$20 மதிப்பிலான அந்த நோட்டை இன்று பலர் $25 முதல் $40 வரை இணையத்தில் விற்பதாகப் பதிந்துள்ளனர். ஆக அதிகமாக ஐந்து நோட்டுகளை $1,688 விற்பதாகவும் பதிவு உள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
‘இபே’ இணையத்தளத்தில் கிட்டத்தட்ட 10 இணைய பதிவுகளும் ‘கேரோசெல்’ தளத்தில் 400க்கும் மேற்பட்ட பதிவுகளும் அந்த நோட்டு விற்பனை செய்வதாக உள்ளதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்துள்ளது.
இம்மாதம் 5ஆம் தேதி அதிபர் ஹலிமா யாக்கோப் இந்த நோட்டை அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.
இரண்டு மில்லியன் நோட்டுகள் ஒன்பது பிரதான வங்கிகளில் விற்பனைக்காக நேற்று வைக்கப்பட்டு பல கிளைகளில் தீர்ந்துவிட்டன.
ஒவ்வொருவரும் அதிகபட்சமாக 20 நோட்டுகளை வாங்கிகொள்ளலாம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்திருந்தது.