படகு மூழ்கியதன் காரணமாக தென் சீனக் கடலில் மிதந்துகொண்டிருந்த சிங்கப்பூரர் ஜான் லோ நாற்பது மணி நேரத்திற்கு பிறகு தாம் அணிந்திருந்த துணிகளை அகற்றினார்.
சுட்டெரிக்கும் சூரியனால் ஏற்பட்ட தோல் எரிச்சல் அதிகமாகி வலி கொடுத்ததால் அதைத் தாங்க முடியாமல் மேல் சட்டை, அரைக் கால் சட்டை, உள்ளாடை எனத் தமது தோலோடு உரசிக்கொண்டிருந்த அனைத்தையும் அவர் அகற்றினார்.
அவர் மிதந்துகொண்டிருந்த இடத்தைக் கடந்த ஒரு கப்பல் அவரைக் காப்பாற்றுவதற்குள் மேலும் 40 மணி நேரம் கடந்துவிட்டது. அதிவரையில் 60 வயது திரு லோ ஆடைகள் இன்றி கடலில் மிதந்துகொண்டிருந்தார்.
“மீன்கள் கீழே நீந்துவதை என்னால் உணர முடிந்தது. மீன்கள் காலைக் கடிப்பது, மீன்கள் கால்களில் உரசுவது போன்றவற்றை நான் உணர்ந்தேன். பிரச்சினை என்னவென்றால், அதைப் பற்றி நினைக்கும்போது கை கால்களை இழந்துவிடுவோமோ என்ற பயம் ஏற்படும்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் திரு லோ தெரிவித்தார்.
நிஜத்திலிருந்து விலகாது இருக்கத் திரு லோ அவரிடம் அப்போது இருந்த மிதவையுடனும் தமது ரோலெக்ஸ் மிடோ கமாண்டர் கைக்கடிகாரத்துடனும் அவர் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார்.
ஆனால் ஒரு தருணத்தில் அவர் மிகவும் களைபுற்றுத் தாகத்தால் தவித்துகொண்டிருந்ததால் தமது மிதவையிலிருந்து கைவிடச் சொல்லும் 'மாயக்' குரல்களைக் கேட்கத் தொடங்கினார்.
யாரோ அவரின் கையைப் படித்து ‘செவன் இலேவன்’ கடைக்குச் சென்று ஒரு கொகாகோலா பானத்தை வாங்குவதாகக் கூட அவருக்குப் பிரமை ஏற்பட்டது. இவை எல்லாம் மே 4ஆம் தேதியன்று தென்கிழக்கு மலேசியாவின் மர்சிங்கிலிருந்து தியோமான் தீவு வரையுள்ள பாதையில் முக்குளிப்புப் பயணத்தில் சென்றபோது படகு மூழ்கியதன் காரணமாக திரு லோ அனுபவித்தவற்றில் ஒரு பகுதியாகும்.
‘டியோகோ கௌ’ கப்பலில் இருந்த ஃபிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஊழியர்களால் உயிர் பிழைத்த திரு லோ பிறகு சிங்கப்பூர் ஆகாயப் படையின் உதவியால் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்றார்.