சிங்கப்பூரில் உள்ள பணம் அனுப்பும் நிறுவனங்கள் இந்த ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் கடன் வழங்கும் சேவைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்து உள்ளது.
அத்தகைய சேவைகளுக்கு எதிராக ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்ட தடை உத்தரவின்படி, பணம் அனுப்பும் நிறுவனங்களின் கடன் வழங்கும் நடவடிக்கைகளை ஆணையம் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கும் என்றும் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க ஆணையம் தயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடன் வழங்கும் நடைமுறை களைத் தான் மறுஆய்வு செய்து வருவதாக கடந்த ஆண்டு அக்டோபரில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் ஆணையம் கூறியிருந்தது.
ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள லக்கி பிளாசா கடைத்தொகுதியில் செயல்படும் ‘டோஸ்ட் மி’ எனும் பணம் அனுப்பும் நிறுவனம் அப்போது இல்லப் பணிப்பெண் களுக்கு வட்டியுடன் கூடிய கடனை வழங்கியது. $700 கடன் தொகைக்காக பணிப் பெண் ஒருவருக்கு 10 விழுக்காடு வரியை அந்நிறுவனம் விதித்தது. அதாவது, $70 கழித்துக்கொண்டு $630 மட்டும் வழங்கப்பட்டது.
இந்த நிலை குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டதையடுத்து ஆணையம் அத்தகைய கடன் வழங்கும் நடைமுறைகளை மறு ஆய்வு செய்யத் தொடங்கியது.
வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் சேவையை வழங்க வேண்டிய நிறுவனங்கள், கடன் வழங்கும் போக்கு வழக்கத்திற்கு மாறானது என்று தொழில்துறை கண்காணிப்பாளர்கள் கூறினர்.
ஒழுங்குமுறை சட்டத்தில் நிலவும் குறைபாட்டை பணம் அனுப்பும் சேவையை வழங்கும் சில நிறு வனங்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக அவர்கள் சுட்டினர்.
உரிமம் பெற்ற கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து கூடுத லான வெளிநாட்டவர்கள் கடன் பெறுவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.