எரியும்போது சத்தமிடும் மத்தாப்புக்களை வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புப் பேட்டையில் கொளுத்தி குடியிருப்பாளர்களை அச்சம் அடையச் செய்ததால் 26 வயது எல்விஸ் சேவியர் ஃபெர்னாண்டசுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெடி சட்டத்தின்கீழ் நேற்று $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மத்தாப்பில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு, இரண்டு மாடி உயரத்துக்கு எழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். அப்பர் அல்ஜுனிட் ரோட்டிலுள்ள குடியிருப்புப் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி அவர் கொளுத்தினார். அன்று ஜூ செங் ரோடு புளோக் 18ன் மூன்றாவது மாடியில் குடியிருக்கும் ஒருவர் சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தபோது நெருப்புத் துகள்களைப் பார்த்தார். பெருத்த சத்தத்துடன் ஒரு நிமிடத்துக்கு தொடர்ந்து மத்தாப்பு எரிந்தது. இரவு 10.30 மணி அளவில் அவரது தாயார் போலிசை அழைத்தார்.
போலிஸ் விசாரணையில் ஃபெர்னாண்டஸ் 6 கட்டு விசிலடிக்கும் மத்தாப்புகளை வாங்கியது தெரியவந்தது.

