சமுதாயத்தில் அனைவரும் வளரும் விதத்தில் ‘நகர்ந்துகொண்டிருக்கும் மின்படிகள்’ தேவை என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.
பொருளியல், சமூக கொள்கைகளை வகுக்கும்போது அடிப்படையில் அதை கவனத்தில் வைத்துகொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரிட்டனின் அரசாங்க ஆய்வுக் கல்விக் கழகத்தின் 10ஆம் ஆண்டு மாநாட்டில் சிறப்புரை ஆற்றியபோது இந்தக் கருத்துகளை திரு தர்மன் பகிர்ந்தார்.
வருமான இடைவெளி, சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறை கொள்ளவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
“மின்படிகள் நகராமல் இருந்தால் வருமான இடைவெளியை சீர்செய்யவோ சமூக முன்னேற்றத்தை முடுக்கிவிடவோ மேலும் கடினமாக இருக்கும்” என்ற அவர், “நகரும் மின்படிகளில் அனைவரும் ஏறினால் சமுதாயத்தில் சீரான ஓட்டம் இருக்கும்,” என கூறினார்.
லண்டனுக்கு ஐந்து நாள் வேலை நிமித்தமான பயணம் மேற்கொண்டிருக்கிறார் திரு தர்மன்.
எதிர்காலத்திற்கான சிங்கப்பூர்=இங்கிலாந்து பங்காளித்துவம் இவ்வாண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடந்து இருநாட்டு உறவை துடிப்புடன் வைத்திருக்கும் வகையில் அவரது பயணம் அமைந்துள்ளது.