14 வயது பெண்ணின் வயிற்றில் சுமார் 100 ‘பபுள் டீ பர்ல்ஸ்’ செரிமானமாகாமல் தங்கியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சீனாவிலுள்ள ஜேஜியாங் மாநிலத்தைச்(Zhejiang province) சேர்ந்த பதின்ம வயது பெண் ஐந்து நாட்களுக்குத் தொடர்ந்து மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டுக் கடந்த மே 28ஆம் தேதி பெற்றோர்களால் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார் எனச் சீன ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.
உண்ண முடியாமல் வயிற்று வலியால் துடித்த அந்தப் பெண்ணுக்குச் செரிமான பிரச்சினை ஏற்பட்டதன் சரியான காரணத்தைத் தெரிந்துகொள்ள முடியாததால் அவருக்குக் கணினிவழி உடலுறுப்பு ஊடுகதிர்ப்படம் எடுக்கப்பட்டது.
அதனின் இறுதியில் அவரது வயிற்றில் பல வட்ட வடிவு நிழல்கள் இருப்பது தெரிய வந்தது.
ஆரம்பத்தில் உண்மையைக் கூற தயங்கிய அவர் அதன் பிறகு ஐந்து நாட்களுக்கு முன்பு ஒரே ஒரு பபுள் டீ பானத்தை மட்டுமே அருந்தியதாக கூறினார்.
இருப்பினும், தமது பெற்றோர்கள் தண்டிப்பார்கள் என்பதை எண்ணி உண்மையைக் கூற மறுக்கிறதாக அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் திரு சாங் லௌசன் சந்தேகித்தார்.
இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டதற்கு அவர் நீண்ட காலமாக பல ‘பர்ல்ஸை’ சாப்பிட்டிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
மலச்சிக்கலுக்காக அவதியுற்ற அவருக்குப் பேதி மருந்துகள் கொடுக்கப்பட்டன.
மாச்சத்து நிறைந்த ‘பபுள் டீ பர்ல்ஸ்’ செரிமானமாவது கடினம் என்று மற்றொரு மருத்துவர் கூறினார். சில கடைகளில் விற்கப்படும் ‘பர்ல்ஸ்களில்’ தடிப்பாக்கிகள், பதனசரக்கு (preservatives) போன்றவற்றை சேர்க்கப்படுவதால் அவற்றைத் தொடர்ந்து உண்பதன் மூலம் இரப்பை செயலிழப்பு நேரிடலாம்.