முன்னோடித் தலைமுறை, மெர்டேக்கா தலைமுறை ஆகியவற்றைச் சேர்ந்த சிங்கப்பூரர்கள் அடுத்த மாதம் தங்களது மெடிசேவ் கணக்கில் $200 முதல் $800 வரையிலான நிரப்புத் தொகையைப் பெறுவார்கள்.
இவ்வாண்டில் இந்த மெடிசேவ் நிரப்புத் தொகைக்காக அரசாங்கத்துக்கு $270 மில்லியன் செலவாகும் என்று நிதி அமைச்சும் சுகாதார அமைச்சும் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிரப்புத் தொகையை மெடிஷீல்ட் லைஃப், மெடிசேவ் கணக்கில் அனுமதிக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள் போன்றவற்றுக்கு சந்தா செலுத்தப் பயன்படுத்தலாம்.
மேலும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை, வெளிநோயாளி சிகிச்சை, பகல்நேர அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கும் அந்தத் தொகையைப் பயன்படுத்த முடியும்.
1950ஆம் ஆண்டுக்கும் 1959ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த மெர்டேக்கா தலைமுறையினர் மெடிசேவ் கணக்கில் நிரப்புத் தொகை பெற இருப்பது இதுவே முதல்முறை. இவ்வாண்டு தொடங்கி 2023ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் $200 மெடிசேவ் நிரப்புத் தொகையை அவர்கள் பெறுவார்கள்.
மெர்டேக்கா தலைமுறை தொகுப்புத் திட்டம் இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மூத்தோர் துடிப்புடன் நடமாடுவதை ஊக்குவிப்பதோடு அவர்களுக்கான சுகாதாரப் பராமரிப்புச் செலவை சரிக்கட்டுவதை நோக்கமாகக் கொண்டது இந்தத் தொகுப்புத் திட்டம்.