சிங்கப்பூரின் வளர்ச்சியிலும் உருமாற்றத்திலும் பொறியியல் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறது. மேம்பாட்டின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் சிங்கப்பூருக்கு, பொறியியல் தொடர்ந்து முக்கியமானதாக நீடித்திருக்கும் என்று மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் இன்று கூறினார்.
அறிவியல் நிலையத்தில் பொறியியல் கண்காட்சியைத் துவங்கி வைத்து பேசிய திரு டியோ, இன்னும் பல இளையர்கள் பொறியியலை அல்லது விஞ்ஞானத்தை வாழ்க்கைத்தொழிலாக நாடவேண்டும் என ஊக்குவித்தார். பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, புதிய நிறுவனங்களுக்கும் ஆகச்சிறந்த வசதிகளையும் ஆதரவையும் சிங்கப்பூர் வழங்குவதால், இந்தத் துறையில் எண்ணற்ற சாத்தியங்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
"நம்மைச் சுற்றிலும் பொறியியல் சாதனைகளைக் காண்கிறோம்: புதுநீர் முதல் நமது போக்குவரத்து கட்டமைப்புகள் வரை; ஆர்ச்சர்ட் சாலையை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் ஸ்டாம்ஃபர்ட் தேக்கத் தொட்டி முதல் ஸ்டாம்ஃபர்ட் திசைமாற்றுக் கால்வாய் வரை; துவாஸில் 2021ஆம் ஆண்டு திறக்கப்படவுள்ள புதிய மாபெரும் துறைமுகம் வரை," என்றார் அவர்.
அறிவியல் நிலையத்தின் புரவலருமான திரு டியோ, சாங்கி விமான நிலையத்தின் ஜுவலைப் பொறியியல் அற்புதமென வர்ணித்தார். ஏனெனில், அதன் கண்ணாடிக் கூரை ஆகாயத்தில் தொங்குவதைப் போலக் காட்சியளிக்கிறது.
ஜூவலின் உட்புற நீர்வீழ்ச்சிக்கும் பசுமைக்கும் இடையூறு ஏற்படாத வகையில் குறைவான தூண்களோடும் உத்தரங்களோடும் ஜூவல் வடிவமைக்கப்பட்டது. அதன் கண்ணாடிக் கூரையின் எடை 3,500 டன். இது ஆறு ஏ380 விமானங்களின் எடைக்கு நிகரானது.
உத்தர வளையமும் கூரையின் நுனிகளோடு இணைக்கப்பட்ட 14 தூண்களும் கூரையைத் தாங்குகின்றன.
"ஜூவலில் நமக்குப் பெரும் மலைப்பூட்டுவது, நம் கண்ணுக்குத் தெரியாதிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கூரையின் ஆதார அமைப்புகளே - இதனை வடிவமைத்த பொறியாளர்களின் அறிவுகூர்மைக்கு நன்றி," என்றார் திரு டியோ.

