அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, சிங்கப்பூரிலுள்ள 16 நகர மன்றங்களும் புதிய ஆளுமை முறைமைக்கு உட்பட்டுச் செயல்படவேண்டும். புதிய ஆளுமை முறைமை புதன்கிழமை (ஜூன் 19) அறிவிக்கப்பட்டது.
நகர மன்றங்கள் அதிக வெளிப்படையான முறையில் இயங்கவும், ஆளுமை தரங்களை உயர்த்தவும் புதிய ஆளுமை முறைமை வழிவகுக்கும்.
நகர மன்றங்கள் புதிய ஆளுமை முறைமையை அமலாக்குவதற்குப் போதிய கால அவகாசம் தரும் வகையில், அடுத்த ஆண்டிலிருந்து அது நடப்புக்கு வரும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
நேர்மை, தற்சார்பின்மை, காரண காரியப் பொறுப்பேற்பு, நடுநிலை, வெளிப்படை ஆகிய நான்கு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஆளுமை முறைமை, நகர மன்றத்தின் செயலாற்றல், உள் கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகள், நிதி நிர்வாகம், சேவை நிறுவன நிர்வாகம் ஆகிய நான்கு துறைகளில் அமலாக்கப்படும்.
தணிக்கை, இடர் நிர்வாகம் அல்லது நிதிநிலை போன்றவற்றை மேற்பார்வையிடும் மன்றக் குழுவின் தலைவர் அதிகபட்சமாகத் தொடர்ந்து 10 ஆண்டுகள் வரை மட்டுமே பதவியில் நீடிக்கலாம் போன்ற வழிகாட்டிகள் புதிய முறைமையில் உள்ளடங்குகின்றன.