பொதுப் பயனீட்டுக் கழகத்தின் நோன்புப் பெருநாள் குறும்படத்தைப் பார்த்து ரசித்த நேயர்கள், படக்கதையின் முடிவு குறித்து தங்களது யோசனைகளைச் சமர்ப்பிக்க கழகம் அழைத்துள்ளது. சுமார் ஆறு நிமிட நீளத்தைக் கொண்டுள்ள ‘கின்ஷிப்’ என்ற அந்தப் படத்தின் கதை, டின், ஸுல் ஆகிய அநாதைச் சிறுவர்களை மையப்படுத்துகிறது. குடும்ப உறவுகளை மதித்தல், சகோரதத்துவம் ஆகியவற்றைப் பற்றிய அந்தப் படம், நோன்புப் பெருநாளையொட்டி மே 30ஆம் தேதி வெளியிடப்பட்டது.
பொதுப் பயனீட்டுக் கழகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பொதுமக்கள் தங்களது யோசனைகளை இம்மாதம் 30ஆம் தேதிக்குள் பதிவிடலாம் அல்லது pub_fow@pub.gov.sg என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இவ்வாறு அனுப்புவோரில் மூவரைச் சிறப்புப் பயிலரங்கு ஒன்றுக்காக பொதுப்பயனீட்டுக் கழகம் தெரிவு செய்யும்.
பொதுப்பயனீட்டுக் கழகத்தின் ஃபேஸ்புக் பக்கத்திலும் யூடியூப் பக்கத்திலும் வெளியிடப்பட்ட அந்தக் குறும்படம் 1.5 மில்லியன் முறைக்கு மேல் பலரால் பார்க்கப்பட்டது. குறும்படத்தைப் பார்த்து மனமுருகிய பலர், அதன் இரண்டாவது பாகத்தைக் காண ஆவலோடு இருப்பதாகக் கழகம் தெரிவித்தது.
கின்ஷிப் படத்திற்கு இவ்வளவு அமோக வரவேற்பை எதிர்பார்க்கவில்லை என்று கழகத்தின் 3பி கட்டமைப்பின் இயக்குநர் சிண்டி கேங் தெரிவித்திருக்கிறார். “இந்தப் படம் மக்களை இணைத்து குடும்ப உறவுகள் மற்றும் நீர் சேமிப்பைப் பற்றிய கலந்துரையாடல்களுக்கு வித்திடுவதைக் காண்பது மனநிறைவை அளிக்கிறது, “ என்றும் அவர் கூறினார்.