பசுமை முத்திரை கொண்ட பாத்திரம் கழுவும் இயந்திரங்களையும் துணி துவைக்கும் இயந்திரங்களையும் சிங்கப்பூரில் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள் விரைவில் வாங்க முடியும்.
இதன் மூலம் வர்த்தகங்கள் 44 விழுக்காடு அளவு வரை தண்ணீரைச் சேமிக்க முடியும்.
இந்தச் சாதனங்களைத் தயாரிக்கும் 'எலக்ட்ரோலக்ஸ்', 'இக்கோலேப்' ஆகிய இரு நிறுவனங்கள் தங்களுடைய இயந்திரங்களுக்குப் புதிதாக அறிமுகமாகி உள்ள பசுமை முத்திரையைப் பெற சான்றிதழுக்கு விண்ணப்பித்து உள்ளன.
பொதுப் பயனீட்டுக் கழகமும் சிங்கப்பூர் சுற்றுச்சூழல் மன்றமும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் இதனைத் தெரிவித்தன.
வர்த்தக நிறுவனத் துறையில் தண்ணீர் சேமிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் சிங்கப்பூர் பசுமை முத்திரை திட்டத்தைப் பொதுப் பயனீட்டுக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த முத்திரையைப் பெறும் இயந்திரங்கள், மின்சாரத்தையும் தண்ணீரையும் சிக்கனமாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட பசுமை அம்சங்களில் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டியிருக்கும்.
தற்போது ஹோட்டல்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், சலவை நிறுவனங்கள் உள்ளிட்டவை அதிக தண்ணீர் தேவைப்படும் இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன.
வீட்டு உபயோகத் தேவையைத் தவிர்த்து மற்ற தேவைகளுக்கான தண்ணீர் தேவை, 2060ஆம் ஆண்டிற்குள் தற்போதைய 55 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காட்டிற்கு அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, வர்த்தக நிறுவனங்கள் தண்ணீரைக் கணிசமாக சேமிக்க வேண்டியது அவசியம் எனப் பொதுப் பயனீட்டுக் கழகம் குறிப்பிட்டது.

