வாகன நிறுத்தும் இடங்களுக்கான விதிகளைப் பின்பற்றாதவர்கள் அடுத்த மாதம் முதல் அதிக அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். அதிகரிக்கப்பட்ட அபராதத் தொகை, விதிகளை மீறும் வாகனமோட்டிகளுக்குத்தான் என்றும் விதிப்படி நடப்போருக்கு இது பொருந்தாது என்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் நகர மறு
சீரமைப்பு ஆணையமும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வாகன நிறுத்துமிடக் குற்றங்களுக்கான அபராதத் தொகை ஆகக் கடைசியாக 1991ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.
தவறிழைக்கும் மோட்டார் சைக்கிளோட்டிகள் நேற்று அறிவிக்கப்பட்ட அபராதத் தொகை உயர்வுக்கிணங்க பத்து வெள்ளி அதிகமாகச் செலுத்த வேண்டி இருக்கும். இப்போதிருக்கும் $25 அபராதம் ஜூலையில் $35ஆக உயர்த்தப்படும்.
"அதேபோல காரோட்டிகளுக்கான அபராதத் தொகை $50லிருந்து $70 ஆக அதிகரிக்கும். கனரக வாகனமோட்டி
களுக்கான அபராதத் தொகையும் $20 உயர்ந்து $100ஆக வசூலிக்கப்படும்," என்று இவ்விரு அமைப்புகளும் அறிவித்துள்ளன.
மோட்டார் சைக்கிள்கள், கனரக வாகனங்கள் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட கார் நிறுத்துமிடங்களில் மற்ற வாகனங்களை நிறுத்துவது, 'சீசன்=பார்க்கிங்' பகுதிகளில் அவற்றுக்குப் பொருந்தாத வாகனங்களை நிறுத்துவது போன்றவை விதிமீறல்களில் அடங்கும்.
கூப்பன் மற்றும் மின்னிலக்க கார் நிறுத்தம் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கான அபராதத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறியது. இக்குற்றங்களை புரியும் காரோட்டிகளுக்கான அபராதத் தொகை $30லிருந்து $40ஆகவும் கனரக வாகனமோட்டிகளுக்கு $40லிருந்து $50ஆகவும் அதிகரிக்கும்.
இவ்வகைக் குற்றங்களுக்கு $8 அபராதத் தொகை செலுத்தும் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு அதே தொகை மாற்றமின்றி நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாகன நிறுத்த எண்ணிக்கையை மீறுவோருக்கான அபராதத் தொகையிலும் மாற்றம் செய்யப்படுகிறது.
கார்களுக்கான புதிய அபராதத் தொகை $8 முதல் $24 வரையிலும் கனரக வாகனங்களுக்கான அபராதத் தொகை $16 முதல் $48 வரையிலும் இருக்கும். தற்போது அவை முறையே $6 முதல் $20 வரையிலும் $12 முதல் $40 வரையிலும் வசூலிக்கப்படுகின்றன. இவ்வகைக் குற்றங்களுக்கும் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான அபராதத் தொகை அதிகரிக்கப்படாமல் $4 ஆக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன நிறுத்தக் கட்டணங்களைச் செலுத்தத் தவறியது அல்லது குறைவாகச் செலுத்தியது போன்ற குற்றங்களுக்காக 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 573,000 அறிவிப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டதாக அறிக்கை குறிப்பிட்டது.
மற்ற வாகனங்களைப் பின்தொடர்ந்து சென்றும் கட்டண வாயில்களைப் புறக்கணித்துச் சென்றும் வாகன நிறுத்தக் கட்டணங்களைச் செலுத்தாமல் தப்புவோருக்கான அபராதத் தொகையும் ஜூலை 1 முதல் அதிகரிக்கப்
படுகிறது. இவ்வகைக் குற்றங்களை புரியும் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான அபராதம் $25லிருந்து $35 ஆகவும் காரோட்டிகளுக்கு $50லிருந்து $70 ஆகவும் கனரக வாகனமோட்டிகளுக்கு $80லிருந்து $100 ஆகவும் அதிகரிக்கப்படும்.
இவ்வாறு கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றுவோருக்கு ஆண்டுதோறும் 4,400 அறிவிப்புக் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன.
வாகன நிறுத்துமிடங்களுக்கான விதிகளை வாகனமோட்டிகள் சரிவர பின்பற்றுமாறு இரு அமைப்புகளும் கேட்டுக்கொண்டு உள்ளன.