கைபேசிகள் உட்பட பல்வேறு மின்சாரப் பொருட்கள் சம்பந்தப்பட்ட இணைய மோசடிச் சம்பவங்கள் குறித்துக் குறைந்தது 445 புகார்கள் இவ்வாண்டு முதல் ஐந்து மாதங்களில் செய்யப்பட்டதாக போலிசார் நேற்று தகவல் வெளியிட்டனர்.
சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 285 சம்பவங்களிலிருந்து இது 56 விழுக்காடு அதிகம். புதிது புதிதாக வெளியிடப்படும் கைபேசிகளையும் மின்சாரச் சாதனங்களையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள பலர் துடிப்பதை மோசடிக்காரர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாக போலிசார் கூறினர். இணைய வர்த்தகத் தளங்களில் இடம்பெறும் இத்தகைய போலி விளம்பரங்களை நம்பிக் கட்டணம் செலுத்துவோர், பின்னர் பொருளைப் பெறுவதில்லை. இதன் தொடர்பில் நம்ப முடியாத அளவுக்கு மிக மலிவான விலையில் ஒரு பொருள் விளம்பரம் செய்யப்பட்டால் அதை உடனே நம்பிவிடாமல் எச்சரிக்கையாக இருக்குமாறு போலிசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.