2017ஆம் ஆண்டில் சீனப் புத்தாண்டுக்கு முந்திய தினத்தில் ஏராளமான கடன்சுமை கொண்டிருந்த சொத்து முகவர் டியோ கிம் ஹெங், ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த தன் மனைவியையும் அவர்களது நான்கு வயது மகளையும் கழுத்தை நெரித்துக் கொன்றார். தனது உட்லண்ட்ஸ் அடுக்குமாடி வீட்டில் 43 வயது டியோ, அவ்விருவரின் சடலங்களுடன் ஒரே மெத்தையில் ஒரு வாரம் படுத்திருந்தார். சடலங்கள் அழுகிப்போவதைத் தாமதப்படுத்த அவர் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தே வைத்திருந்தார்.
தன் உயிரை மாய்த்துக்கொள்ள டியோ இணையத்தில் வழி தேட முயன்றார். அந்தச் சடலங்களுக்குத் தீவைத்த அவர், அந்தத் தீக்குள் தாம் புகுந்து இறக்க முயன்றதாகவும் பின்னர் சூடு தாங்க இயலாமல் அவ்வாறு செய்யவில்லை என்றும் நீதிமன்றத்திடம் தெரிவித்தார். டியோவின் மனைவியைத் தொடர்பு கொள்ள இயலாத அவரது குடும்பத்தார் இறுதியாக போலிசாருக்குப் புகார் செய்தனர்.
பெரும் சூதாட்டப் பிரியரான டியோவின் கடன் 2016ஆம் ஆண்டிறுதிக்குள் சுமார் 120,000 வெள்ளியாக அதிகரித்தது. டியோ, தனது மனைவியைக் கொன்ற நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன் தம்பதியர் இருவரும் பணம் தொடர்பில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தானும் தனது மனைவியும் தங்கள் மகளைக் கொன்று தற்கொலை செய்ய இணங்கியதாக டியோ முதலில் போலிசாரிடம் பொய்யுரைத்தார்.
நோக்கத்துடன் செய்யப்படும் கொலைகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.