தொடக்கநிலை முதலாம் வகுப்புக்குக் குறைவானோர் பதிவு

தொடக்கநிலை முதலாம் வகுப்புக்குக் குறைவானோர் பதிவு

2 mins read
f5c69d4d-e236-41ea-b790-6ca605863b85
-

அடுத்த ஆண்டு தொடக்கநிலை முதலாம் வகுப்பில் சேரவிருக்கும் மாணவர்களுக்கு இவ்வாண்டின் பதிவு நடவடிக்கையில் போட்டி குறைவாகவே இருக்கும் என கருதப்படுகிறது. ஏனெனில், சென்ற ஆண்டின் 40,600 சிறுவர்களைவிடக் குறைவாக இவ்வாண்டு சுமார் 38,000 சிறுவர்களே தொடக்கநிலை முதலாம் வகுப்புக்குப் பதிவு செய்வார்கள் என கல்வி அமைச்சு நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது. வருடாந்தர தொடக்கநிலை முதலாம் வகுப்புப் பதிவு ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது.

இன்று தொடங்கும் முதல் கட்டத்தில், பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தம்பி தங்கையர் பதிவு செய்வார்கள். அடுத்த செவ்வாய்க்கிழமை தொடங்கும் 2ஏ1 கட்டத்தில், முன்னாள் மாணவர் சங்கம் அல்லது பள்ளி ஆலோசனை அல்லது நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இருக்கும் பெற்றோரின் பிள்ளைகள் பதிவு செய்வார்கள்.

ஜூலை 15ஆம் தேதி தொடங்கும் 2ஏ2 கட்டத்தில், முன்னாள் மாணவர்களாக இருந்த பெற்றோர் அல்லது உடன்பிறந்தோரின் பிள்ளைகள் அல்லது உடன்பிறந்தோர், அல்லது பள்ளியில் வேலை செய்யும் பெற்றோரின் பிள்ளைகள் பதிவு செய்வார்கள். கல்வி அமைச்சு நடத்தும் பாலர் பள்ளிகளில் பயிலும் பிள்ளைகளும், அதே வளாகத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் சேர்வதற்கு இந்தக் கட்டத்தின்போது விண்ணப்பிக்கலாம்.

பள்ளியில் தொண்டூழியர்களாகச் சேவை புரியும், பள்ளியுடன் தொடர்புள்ள தேவாலயங்கள் அல்லது குலமரபுச் சங்கத்தில் அங்கம் வகிக்கும், அல்லது சமூகத் தலைவர்களாக இருக்கும் பெற்றோர், ஜூலை 22ஆம் தேதி தொடங்கும் 2பி கட்டத்தின்கீழ் தங்கள் பிள்ளைகளைப் பதிவு செய்யலாம். பள்ளியுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் ஜூலை 29ஆம் தேதி (இணையம்வழி) அல்லது ஜூலை 30ஆம் தேதி (பள்ளியில் பதிவு) 2சி கட்டத்தின்கீழ் பதிவு செய்வார்கள். அடுத்த ஆண்டு வெலர் தொடக்கப்பள்ளி எனும் புதிய பள்ளி திறக்கப்படுகிறது. இதனையும் சேர்த்து இவ்வாண்டு மொத்தம் 185 தொடக்கப்பள்ளிகளில் பதிவு நடவடிக்கை நடைபெறுகிறது.

வெலர் தொடக்கப்பள்ளி கட்டுமானத் தாமதத்தின் காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் தயாராகும். எனவே, ஜனவரி 2 முதல் மார்ச் 13 வரையிலான முதல் பாடத்தவணையின்போது அருகிலுள்ள பொங்கோல் கோவ் தொடக்கப்பள்ளியில் வெலர் தொடக்கப்பள்ளி செயல்படும். கடல்நாக ஆண்டில் பிறந்த அதிகமான பிள்ளைகளுக்கு இடமளிப்பதற்காகச் சென்ற ஆண்டு பதிவின்போது 184 பள்ளிகளில் 2,600 கூடுதல் இடங்கள் வழங்கப்பட்டன.