நான்கு வயது மகளையும் கர்ப்பிணி மனைவியையும் கழுத்தை நெரித்துக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டியோ கிம் ஹெங், "உன் உதவாக்கரை அப்பாவைப் பார்," என்று தன் மனைவி தன்னைப் பற்றி மகளிடம் பழித்துக் கூறியதாக நேற்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
உட்லண்ட்ஸ் இரட்டைக் கொலை வழக்கு விசாரணையின் இரண்டாவது நாளான நேற்று, தன் மனைவி திருவாட்டி சூங் பெய் ஷான், நான்கு வயது மகளான ஸி நிங் ஆகியோரைக் கொல்வதற்கு முன் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைப் பற்றி டியோ நேற்று விவரித்ததில் இது தெரிய வந்தது.
2017ஆம் ஆண்டில் ஜனவரி 20ஆம் தேதி காலையில் இருவருக்கும் இடையே வாய்ச்சண்டை மூண்டதில் தன்னை உதவாக்கரை என்று மகளிடம் மனைவி சொன்னதாகக் கூறப்பட்டது.
கொலை நடந்த நாளன்று காலையில் டியோ மகளின் பள்ளிச் சீருடையை அகற்றி மாற்று உடை அணிவித்தார்.
மகள் ஏன் பள்ளிக்குப் போகவில்லை என்று திருவாட்டி சூங் கேட்டபோது பள்ளிக் கட்டணத்திற்குத் தன்னிடம் பணம் இல்லை என்றும் மகள் பள்ளிக்குச் சென்றால் விரட்டி அடிக்கப்படுவது அவமானமாக இருக்கும் என்றும் டியோ பதிலளித்ததில் வாக்கு வாதம் தொடங்கியது.
மற்ற குடும்பங்கள் மூன்று பிள்ளைகள் இருந்தால்கூட நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள் என்றும் ஒரு பிள்ளையை வைத்திருக்கும் டியோவால் அதுகூட முடியவில்லை என்றும் பழித்த திருவாட்டி சூங், தன்னை உதவாக்கரை என்று சொன்னார். அதைத் தொடர்ந்து பல புண்படுத்தும் சொற்களைப் பயன்படுத்தியதாகவும் டியோ நீதிமன்றத்தில் விவரித்தார். டியோ நிதி நெருக்கடியில் சிக்கியிருந்தது குறித்து நேற்றைய விசாரணையின் பெரும்பகுதி அமைந்தது. ஸி நிங் சென்ற சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கான பள்ளிக் கட்டணத்தை இரு மாதங்களாக டியோ கட்டவில்லை என்று பள்ளியின் முன்னாள் முதல்வர் தெரிவித்தார். டியோவின் சூதாட்டப் பழக்கத்தைப் பற்றியும் பெரும் அளவிலான தொகையைக் கடன்வாங்கியதைப் பற்றியும் டியோவின் முன்னாள் வேலையிடத்து நண்பர்கள் சாட்சியம் அளித்தனர். விசாரணை தொடர்கிறது.