ஆத்திரத்தில் மதியிழந்து தனது ஒரு வயது மகனை அடித்து மூளையில் காயப்படுத்திய 27 வயது தாயாருக்கு ஆறரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தாயாரின் செயலால் பிள்ளையின் மூளை வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘த நியூ பேப்பர்’ நாளிதழ் தெரிவித்தது.
வேண்டுமென்றே கடுமையான காயத்தை விளைவித்த ஒரு குற்றமும் பிள்ளையைச் சித்ரவதை செய்த மற்றொரு குற்றமும் அவர் செய்திருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனையை விதித்தபோது மேலும் நான்கு குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் கருத்தில் கொண்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தனது பிள்ளையைக் காண அந்தத் தாய் செல்லவில்லை. அவனை அந்தத் தாய் தத்துக்கொடுக்கப்போவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மகன், அந்தப் பெண்ணின் மூன்று பிள்ளைகளில் இரண்டாமவன்.
இந்தச் சம்பவத்திற்கு முன்னதாக அந்தப் பிள்ளையை வயிற்றில் குத்தியதுடன் எலும்பு முறியும் அளவுக்கு அவனது கையை இழுத்திருக்கிறார் அந்தப் பெண். குற்றம் செய்தவர் தனது முதல் குழந்தையை 23 வயதில் பெற்றதாகவும் இளம் தாய்மை அவருக்குக் கடுமையான மன உளைச்சலைத் தந்ததாகவும் அந்தப் பெண்ணுக்காக வாதிட்ட தற்காப்பு வழக்கறிஞர் திரு ஜான் கோ தெரிவித்தார்.