தனது 15 வயது மாணவியைப் பலமுறை மானபங்கம் செய்த தனியார் துணைப்பாட ஆசிரியருக்கு ஈராண்டு ஒரு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த 48 வயது ஆடவருக்கு ஆறு பிரம்படிகளை நீதிமன்றம் இன்று விதித்தது.
2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்தாண்டு மார்ச் மாதம் வரை அவர் தமது வீட்டில் கணக்குப் பாட வகுப்புகளை நடத்தி வந்தார். ஒவ்வொரு வகுப்பிலும் ஐந்து முதல் பன்னிரண்டு வரையிலான மாணவர்கள் இருப்பர். பாதிக்கப்பட்ட மாணவி வாரத்திற்கு மூன்று முறை கணக்குப் பாடங்களுக்காக அந்த ஆடவரின் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
கடந்தாண்டு பிப்ரவரி மாதத்திற்கும் மார்ச் மாதத்திற்கும் இடையே வகுப்பு முடிந்த பிறகு பல முறை அந்த மாணவியைத் தனியாக இருக்கச் சொன்ன அந்த ஆடவர், அவரைத் தகாத முறையில் தீண்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு நடக்கும்போது அந்த மாணவி செய்வதறியாது திகைத்துப்போனதாகக் கூறப்பட்டது.
இறுதியில் அந்த மாணவி, இது குறித்து தமது பள்ளி நண்பர் ஒருவரிடம் தெரிவிக்க அவர் நடந்ததைப் பள்ளியிடம் கூறினார். பள்ளி ஊழியர்கள் இது பற்றி பெண்ணின் தாயாரிடம் தெரிவித்ததை அடுத்து இது குறித்த போலிஸ் புகார் கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி செய்யப்பட்டது

