'எஸ்பிஎஸ் டிரான்சிட்' ஈரடுக்குப் பேருந்து ஒன்று சாலைத்தடுப்பின் மதில் மீது மோதியதைத் தொடர்ந்து அதன் பெண் ஓட்டுநர் சாங்கி பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
சீமெய் வட்டாரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தைப் பற்றிய தகவல் போலிசாருக்கு நேற்று மாலை 6.33 மணிக்குக் கிடைத்தது.
விசாரணை தொடர்கிறது. அந்த 59 வயது பெண் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அந்த ஓட்டுநர் பின்னர் வீடு திரும்பியதாக 'எஸ்பிஎஸ் டிரான்சிட்' நிறுவனத்தின் வர்த்தகத் தொடர்பு பிரிவின் மூத்த துணைத்தலைவர் டெம்மி டான் தெரிவித்தார்.
"இந்தச் சம்பவத்தால் பயணிகளுக்கும் வாகனமோட்டிகளுக்கும் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். எவரும் காயமடையாதது குறித்து நாங்கள் நன்றியுணர்வுடன் இருக்கிறோம்," என்றார் திருவாட்டி டான். பேருந்து நிறுவனம் தொடர்ந்து விசாரணை நடத்துவதாகவும் அவர் கூறினார்.

