கூட்டுரிமை வீடுகளின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அத்துமீறி ஒரு வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த பணிப்பெண்ணை மானபங்கம் செய்த குற்றத்திற்காக அவருக்கு மூன்று ஆண்டு நான்கு மாதச் சிறைத்தண்டனையுடன் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன. 33 வயது ஜெஃப்ரி அலி, திறந்து கிடந்த சன்னல் ஒன்றின் வழியாக தரைத்தளத்தில் இருந்த அந்த வீட்டுக்குள் புகுந்து அதன் சமையலறையிலிருந்து கத்தரிக்கோல் ஒன்றை எடுத்தார். அப்போது தனது முதலாளிகளின் இரண்டு இளம்பிள்ளைகளுடன் தூங்கிக்கொண்டிருந்த பணிப்பெண் இருந்த அறைக்குள் நுழைந்தார்.
சிங்கப்பூரரான ஜெஃப்ரி, மியன்மாரைச் சேர்ந்த அந்த 37 வயது பெண்ணின் மேலாடையைக் கத்தரிக்கோலால் வெட்டி தகாத முறையில் அவரைத் தீண்டியதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்தது. அத்துடன் அவர் அந்தக் கத்தரிக்கோலைக் காட்டி அந்தப் பெண்ணை அமைதியாக இருக்கும்படி மிரட்டினார். பணிப்பெண் நடந்ததைப் பின்னர் தனது முதலாளியிடம் தெரிவித்ததை அடுத்து 50 போலிஸ் அதிகாரிகளும் 17 வாகனங்களும் கூட்டுரிமை வீட்டைச் சுற்றி முற்றுகையிட்டு ஜெஃப்ரியைக் கைது செய்தனர்.
பணிப்பெண்ணை மானபங்கம் செய்த பிறகு ஜெஃப்ரி வேறொரு வீட்டுக்குள் நுழைந்து 643 ரிங்கிட் மற்றும் 212 வெள்ளி ரொக்கத்தைத் திருடிச்சென்றுள்ளார். ஜெஃப்ரி ஒரு போதைப்பொருள் புழங்கி என்பது போலிசாரின் விசாரணையில் பின்னர் தெரிய வந்தது.