மலேசியாவை விட்டு வெளியேறும்போது குடிநுழைவு அதிகாரியிடம் தமது கடப்பிதழைக் காட்டத் தவறிய சிங்கப்பூரரான முகம்மது அல்ஃபாலா முகம்மது யூசோஃப் எனும் 27 வயது ஆடவருக்கு 2,500 ரிங்கிட் (S$820) அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த மாதம் 25ஆம் தேதி மாலை 5.58 மணிக்கு திரு முகம்மது, ஜோகூர் பாரு சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவு வளாகத்தில் அந்தக் குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்பட்டது.
தமக்குப் போதிய ஓய்வு இல்லாத காரணத்தால் மிகுந்த களைப்பாக இருந்தது என்றும் அதனால் கடப்பிதழ் சோதனைக்காக குடிநுழைவுச் சாவடியில் நிறுத்தாமல் சென்றுவிட்டதாகவும் திரு முகம்மது ஜோகூர் பாரு நீதி மன்றத்தில் கூறினார்.
அந்தக் குற்றத்தைப் புரிவோருக்கு 10,000 ரிங்கிட் வரையிலான அபராதம், ஐந்து ஆண்டு சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

