இவ்வாண்டுக்கான சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பை 2.3 விழுக்காட்டிலிருந்து 2 விழுக்காட்டுக்கு அனைத்துலக பணநிதியம் குறைத்துள்ளது.
சிங்கப்பூரின் பொருளியல் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்-டில் 0.1%தான் வளர்ச்சி கண்டது. அது கடந்த பத்தாண்டுகளில் ஆகக் குறைவு. இது பொருளியல் மந்தநிலை மற்றும் நாணயக் கொள்கை தளர்ச்சி ஆகியவற்றுக்கு இட்டுச் சென்றுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
"உலக அளவில் வர்த்தகம் பதற்றம் நிலவி வரும் வேளையில், வெளிப்புற துறைகளிலிருந்து கிடைத்துவரும் ஆதரவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொருளியல் வளர்ச்சி உள்நாட்டுத் தேவைகளைப் பொறுத்தே அமையும்," என்று பணநிதியம் நேற்று கூறியது.
சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி, மிதமான பருவத்துக்குப் பிறகு 2.5 விழுக்காட்டுக்கு நிலைப்படலாம் என்று குறிப்பிட்ட பணநிதியம், மே மாதம் 14ஆம் தேதியோடு முடிவடைந்த சிங்கப்பூர் அதிகாரிகளுடனான பேச்சுகளுக்குப் பிறகு இந்த முன்னுரைப்பு இடம்பெற்றுள்ளது என்றும் சொன்னது.

