தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த அடுக்குமாடி வீடு ஒன்றுக்குள் சிக்கியிருந்த தம்பதியரைத் தீயணைப்பாளர்கள் வல்லந்தமாகப் புகுந்து காப்பாற்றியுள்ளனர். புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 21லுள்ள புளோக் 293’டி’ல் நடந்த இந்தத் தீச்சம்பவம் பற்றி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்குப் பின்னிரவு 12.40 மணிக்குத் தகவல் கிடைத்தது.
சுவாசக் கருவிகளுடன் அந்த வீட்டுக்குள் சென்றிருந்த தீயணைப்பாளர்கள், தரையில் ஓர் ஆடவர் மூர்ச்சையாகி தீக்காயங்களுடன் சாய்ந்திருந்ததைக் கண்டனர். உடனடியாக அவர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதே வீட்டில் காணப்பட்ட ஒரு பெண், அளவுக்கு அதிகமான புகையை உள்வாங்கியதன் தொடர்பில் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
குடிமைத் தற்காப்புப் படையினரும் போலிசாரும் பாதிக்கப்பட்ட புளோக்கிலிருந்து கிட்டத்தட்ட 70 குடியிருப்பாளர்களை வெளியேற்றினர்.வீட்டின் வரவேற்பு அறையிலுள்ள பொருட்களை எரித்த அந்தத் தீ, இரண்டு நீர்ப்பாய்ச்சும் குழாய்களால் அணைக்கப்பட்டது. தீயில் கருகிப் போயிருந்த வீட்டின் உட்புறத்தைக் காட்டும் படம் ஒன்றைக் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தது.
சம்பவத்திற்கான காரணத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆராய்ந்து வருகிறது.
இந்தத் தீச்சம்பவத்திற்கு இரண்டு மின் ஸ்கூட்டர்கள் காரணம் என்று புக்கிட் பாத்தோக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை தெரிவித்தார். வெளியேற்றப்பட்ட எழுபதுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் இளைப்பாறுவதற்கு அவர்களுக்காக வட்டாரவாசிகள் இணைப்பு நிலையத்தை விரைவாகத் தயார்படுத்திய தொண்டூழியர்களை அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் பாராட்டினார்.
வெளியேற்றப்படும்போது காயமடைந்த முதியவர் ஒருவர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.