சிங்கப்பூரர்களிடையே ஏற்ற தாழ்வைச் சமாளிக்க நான்காம் தலைமுறை தலைவர்கள், வசதி குறைந்தோருக்கான ஆதரவைத் தொடர்ந்து வலுப்படுத்துவதுடன் அனைவரும் தங்களது வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான வாய்ப்புகளை உறுதி செய்ய பாடுபடுவர். இந்த இருமுனை அணுகுமுறையைக் கல்வி மற்றும் நிதிக்கான இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா இன்று குறிப்பிட்டார். ஏற்ற தாழ்வைச் சமாளிப்பதற்கும் சமூக முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும் நான்காம் தலைமுறைத் தலைவர்கள் கொண்டுள்ள குறிக்கோளை அவர் இன்று விவரித்தார்.
இவை முக்கியமான அக்கறைகள் என்று அவர் தேசிய பல்கலைக்கழகத்தின் சமூக சேவை ஆய்வு மாநாட்டின்போது தெரிவித்தார்.
“சிங்கப்பூரர்களாகிய நாம் ஒருவரையொருவர் கவனித்து பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு சிங்கப்பூரரும் முக்கியம். அனைவரும் சிறப்பாக செய்வதே எங்கள் விருப்பம்,” என்று குமாரி இந்திராணி குறிப்பிட்டார்.
“எங்கிருந்து தொடங்கினாலும் சரி, எல்லோரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் முன்னேறுவதற்கான வாய்ப்புகளைக் கொண்ட இடமாக சிங்கப்பூர் என்றென்றும் திகழ வேண்டும்; பின்னணி என்னவாக இருந்தாலும் சரி, சிறப்பான வாழ்க்கையைத் தேடிக்கொள்ள சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பைக் கொண்டுள்ள இடமாக இந்நாடு இருக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
ஏற்ற தாழ்வைக் கையாள்வது தேசிய நலனைச் சார்ந்த விவகாரம் என்றும் குமாரி இந்திராணி தெரிவித்தார். வருமான இடைவெளி அதிகமாகி, பிரிவுகளைக் கொண்ட சமூக அமைப்பு உருவானால் சமுதாயம் உடைந்துபோகும் என்று அவர் கூறினார்.
“எனவே நமது சமுதாயத்தின் அடிப்படையே இப்போது இதில் பிரச்சினையாக உள்ளது. இது அரசாங்கத்திற்கான பணி மட்டும் அல்ல. நம் அனைவரையும் பாதிக்கும் இந்தப் பிரச்சினை அனைவரின் பொறுப்பு” என்றார் குமாரி இந்திராணி.