ஹார்பர்ஃபிரண்ட் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தட கோளாறு காரணமாக வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் பயணிகள் தாமதமடைந்தனர்.
இன்று காலை 8.10 மணிக்கு 'எஸ்பிஎஸ் டிரான்சிட்' பொதுப் போக்குவரத்து நிறுவனம் இந்தத் தாமதத்தை முதலில் அறிவித்தது. இரண்டு திசைகளிலும் கூடுதலாக ஐந்து நிமிட பயண நேரத்தை எதிர்பார்க்கும்படி பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர், பயண நேரம் 10 நிமிடங்கள் அதிகரிக்கும் என்றும் அதற்கு பின்னர் 15 நிமிடங்கள் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சேவைத்தடைக்காக மன்னிப்பு கேட்பதாக எஸ்பிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியது.
வடக்கு-கிழக்கு ரயில் பாதையின் பல்வேறு நிலையங்களில் நீளமான வரிசைகள் உருவாகியதாகச் சமூக ஊடகப் பயனீட்டாளர்கள் கூறினர்.