ஏம்பர் கூட்டுரிமை வீடுகளில் வசிக்கும் வழக்கறிஞர் ஒருவர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்றொருவரின் காரைத் தன் சாவியால் கீறியதற்காக அவருக்கு 2, 500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எவரெக்ஸ் சட்ட நிறுவனத்தின் இயக்குநர் 49 வயது இயன் சாங் யென் பிங், குறும்புச்செயலில் ஈடுபட்ட குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
ஜூலை மாதம் 31ஆம் தேதி, சாங் தனது காரை சுரங்கத் தளத்திலுள்ள கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தினார். அப்போது கார் நிறுத்தும் பகுதி ஒன்றில் திரு இயே யூ ஸி என்பவர் தனது காரைச் சரியாக நிறுத்தாததை சாங் கண்டார். 29 வயது திரு இயே சுயநலத்துடன் நடந்துகொள்வதாக சாங் கருதியதாக தற்காப்பு வழக்கறிஞர் லீ டெக் லேங் தெரிவித்தார். சாங், காருக்கு முன் செல்லும் காட்சியும் கீறல் சத்தங்களும் திரு இயேயின் காருக்குள் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகின. இது குறித்து திரு இயே ஆகஸ்ட் 1ஆம் தேதி போலிசாருக்குப் புகார் செய்தார். அந்த காரைக் கீறியது தானே என்று சாங் பின்னர் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டார்.
சாங் மன அழுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததாக இவ்வாண்டு ஏப்ரல் 22ஆம் தேதி மனநலக் கழகம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தக் குற்றத்திற்காக சாங்கிற்கு ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.