ஹார்பர்ஃபிரண்ட் எம் ஆர் டி நிலையத்தின் தடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று காலை சுமார் இரண்டு மணி நேரத்துக்கு வடக்கு-கிழக்கு தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
காலை 8.10 மணியளவில் சேவை பாதிப்பு குறித்து அறிவித்த எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம், அந்தத் தடத்தில் இருபுறமும் 5 நிமிடம் கூடுதல் பயண நேரம் தேவைப்படும் என்றது. அடுத்தடுத்த டுவிட்டர் பதிவுகளில் கூடுதல் பயண நேரம் அதிகரித்தது.
காலை 9.24 மணியளவில் ரயில் சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்தது. தடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஹார்பர்ஃபிராண்டில் ஒரு தடத்தை மட்டுமே பயணிகள் பயன்படுத்த வேண்டியதாயிற்று என எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் நிறுவன தொடர்புகள் மூத்த துணைத் தலைவர் டாமி டான் கூறினார். தடத்தில் ஏற்பட்ட கோளாறுக்கான காரணம் பற்றி விசாரிக்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

