சாவி ஒன்றைக்கொண்டு மற்றொருவரின் காரில் கீறலை ஏற்படுத்திய வழக்கறிஞர் ஒருவருக்கு $2,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏவெரெக்ஸ் சட்ட நிறுவனத்தின் இயக்குநரான இயான் சாங் யென் பிங், 49, இந்தக் குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி தமது கொண்டோமினியத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்துக்கு காரை ஓட்டிச்சென்ற சாங், அங்கு திரு யி யுஸியின் கார் அதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சரியாக நிறுத்தப்படாததைக் கவனித்தார்.
பிறரைப் பற்றிய அக்கறையின்றி திரு யி காரை நிறுத்தியிருப்பதாகக் கருதிய சாங், திரு யியின் கார் கதவின் மீது சாவியால் கீறினார். அதனைச் சரிசெய்ய திரு யிக்கு $3,350 செலவானது. இந்தச் சம்பவத்தின்போது திரு சாங் மன அழுத்தத்திற்கு உட்பட்டிருந்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். நீதிமன்ற நடைமுறைகள் முடிந்த பிறகு, திரு சாங் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவுசெய்யப்படும் என வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்தது.

