விதிமீறும் தனிநபர் நடமாட்டச் சாதன ஓட்டிகளைப் பிடிக்கும் வகையில் சிங்கப்பூர் முழுவதும் எளிதில் கண்ணுக்குப் புலப்படாத இடங்களில் தானியக்க கண்காணிப்புப் படக்கருவிகள் பொருத்தப்படவுள்ளன.
அத்துடன், நிலப் போக்குவரத்து ஆணையம் தனது 'மைடிரான்ஸ்போர்ட்.எஸ்ஜி' செயலியில் 'ரிப்போர்ட் பிஎம்டி/பிஏபி' எனும் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதன்மூலம் அச்செயலியைப் பயன்படுத்தும் 700,000 பேர், தவறிழைக்கும் தனிநபர் நடமாட்டச் சாதன ஓட்டிகள் பற்றி அதிகாரிகளுக்குத் தகவல் அளிப்பதுடன் அது தொடர்பான படங்களையும் காணொளிகளையும் அனுப்ப முடியும்.
இந்த இரு நடவடிக்கைகளும் இம்மாத இறுதிவாக்கில் நடைமுறைக்கு வரும். தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் கட்டாயமாகப் பதிவுசெய்யப்பட வேண்டும் எனும் விதி இம்மாதத் தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்தது. தானியக்க சிசிடிவி முயற்சி, 18 மாதங்களுக்குப் பரிசோதனை முறையில் இடம்பெறும். அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பின் பங்காளித்துவத்துடன் மேற்கொள்ளப்படும் இம்முயற்சி, பொதுப் பாதைகளிலும் சாலைகளிலும் முக்கியமான இடங்களைக் குறிவைக்கும்.
"அதிவேகத்தில் ஓட்டுவது போன்ற குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் இந்தத் தானியக்க சிசிடிவிக்களில் பயன்படுத்தப்படும் காணொளிப் பகுப்பாய்வு மென்பொருள் எந்த அளவுக்குச் செயல்திறன்மிக்கதாக இருக்கிறது என்பதைக் கண்டறிய இந்தப் பரிசோதனை முயற்சி இலக்கு கொண்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் தவறிழைத்துப் பிடிபடுவோர் விசாரணையை எதிர்நோக்கலாம்; தண்டனையும் விதிக்கப்படலாம்," என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மூத்த நாடாளுமன்றச் செயலாளரான பே யாம் கெங், "மைடிரான்ஸ்போர்ட்.எஸ்ஜி செயலியை இதுவரை 700,000க்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதைப் பார்க்கும்போது, 700,000க்கும் அதிகமான படக்கருவிகளும் கண்களும் தவறிழைக்கும் தனிநபர் நடமாட்டச் சாதன ஓட்டிகளைக் கண்காணித்து வருவதாகக் கொள்ளலாம். அதேபோல, தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோரும் தாங்கள் விதிமீறும் பட்சத்தில் தங்களைச் சுற்றியுள்ளோரில் எவரும் புகார் அளிக்க முடியும் என எச்சரிக்கையுடன் இருப்பர்," என்று கூறினார்.
'மைடிரான்ஸ்போர்ட்.எஸ்ஜி' செயலியில் 'ரிப்போர்ட் பிஎம்டி/பிஏபி' அம்சம் இம்மாதம் 31ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும்.
தனிநபர் நடமாட்டச் சாதன விதிமீறல் குறித்து தகவல் தெரிவிக்க விரும்பும் அச்செயலியின் பயனாளர்கள், அந்தச் சாதனத்தின் அடையாள எண், சம்பவம் குறித்த விவரம், அது தொடர்பான புகைப்படம் அல்லது காணொளி ஆகியவற்றுடன் தங்களைத் தொடர்புகொள்வதற்கான விவரங்களையும் அளிக்க வேண்டும். அந்தச் சாதனத்தின் அடையாள எண் தெரியாவிடினும் புகார் அளிக்க முடியும்.