நீண்டகால சட்டபூர்வ அதிகார பத்திரத்திற்கு விண்ணப்பிப்போர் ஆகஸ்ட் ஒன்று முதல் மேலும் விரைவாகச் செய்துவிடலாம்.
மனநல ஆற்றலை இழந்தோரின் சார்பில் நியமிக்கப்பட்ட வேறொருவர், மருத்துவம், நிதி தொடர்பிலான முடிவுகளை எடுக்க இந்தப் பத்திரம் அனுமதிக்கும்.
இதுவரை பத்திரத்தை பதிய ஆறு வாரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் புதிய மாற்றங்களின்படி காத்திருக்கும் நேரம் மூன்று வாரங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டபூர்வ பத்திரத்தைப் பெறுவதற்கான நேரம் குறைக்கப்பட்டாலும் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
தேவை ஏற்பட்டால் விண்ணப்பத்தை மீட்டுக்கொள்ள இவர்களுக்குப் போதுமான அவகாசம் இன்னமும் இருக்கும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று கூறினார்.
பதிவான பத்திரத்தைப் பார்வையிட அடுத்த மாதம் முதல் இணையத்தளம் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது.
இதுவரை வங்கிகளுடனும் மருத்துவமனைகளுடனும் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டுமென்றால் அசல் பத்திரத்தை நேரடியாகக் காட்ட வேண்டும்.
இனி இணையத்தளத்தில் பத்திரத்தைப் பார்வையிடுவதுடன் அச்சிட்டும் பெற்றுக்கொள்ளலாம்.
'டிமென்ஷியா' உள்ளோரைப் பராமரிப்பவர்களுக்காக 'அல்ஸைமர்ஸ்' நோய் கழகம் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிதி திரட்டு நிகழ்ச்சியில் திரு லீ இம்மாற்றங்கள் குறித்துப் பேசினார்.
அத்துடன் இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்குமாறும் வந்திருந்தவர்களைக் கேட்டுக்கொண்டார் திரு லீ.
கிட்டத்தட்ட 67,000 பேர் இதன் தொடர்பில் முடிவெடுத்து விண்ணப்பித்திருப்பதாகவும் கூறப்பட்டது.