சமூகத்தில் எளிதில் பாதிப்படையக்கூடியவர்கள் இருக்கையில் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுமாறு நேற்று அதிபர் ஹலிமா யாக்கோப் இளையர்களைக் கேட்டுக்கொண்டார். 'ஸ்கேப்' இடத்தில் 1,000க்கும் மேற்பட்ட இளையர்கள், மக்கள் கழகத்தைச் சேர்ந்த தொண்டூழியர்கள், அதிபர் சவால் நன்கொடைத் திட்டம் மூலம் பயனடைந்து வருபவர்கள் ஆகியோருடன் திருவாட்டி ஹலிமா சந்தித்துப் பேசியதுடன் தெரு காற்பந்து, கூடைப்பந்து, வலைப்பந்து, நடனம் போன்ற பல அங்கங்களில் அவர்களுடன் சேர்ந்து பங்கேற்றார்.
எளிதில் பாதிப்புக்குள்ளாகும் சமூகத்தினருக்கு ஆதரவு நல்குமாறு அதிபர் கேட்டுக்கொண்டதுடன் இளம் தொண்டூழியர்கள், தங்களின் துடிப்பான வயது காரணத்தால் இதில் பெரும் பங்காற்றலாம் என்றும் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து 6,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களை இக்குறிப்பிட்ட சமூகத்தினருக்குக் கைகொடுக்க அதிபர் ஒன்று திரட்டியுள்ளார். இந்தத் தொண்டூழியர்களில் 80 விழுக்காட்டினர் இளையர்கள். அதிபர் சவாலின்கீழ் இடம்பெறும் திட்டங்களில் ஒன்றாக இவ்வாண்டு தொண்டூழியர் இயக்கம் அமைந்துள்ளது. இதில் தனிநபர்கள், பள்ளிகள், அமைப்புகள் ஆகியவை பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தொண்டூழிய நடவடிக்கைகளிலும் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றன. அதிபர் சவாலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மக்கள் கழகம் $250,000 திரட்ட உறுதி அளித்துள்ளது.