வேனுடன் மோதிய கார் கால்வாயில் பாய்ந்ததில் இருவர் காயம் அடைந்தனர். சனிக்கிழமை இரவு ஈசூனில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. கம்பாஸ் அவென்யூவை நோக்கிச் செல்லும் ஈசூன் அவென்யூ 7ல் புளோக் 173க்கு அருகே வேனும் காரும் விபத்தில் சிக்கியதாக இரவு 9.53 மணியளவில் போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்த போலிசார் காரில் பயணம் செய்த 55 வயது ஆண் ஓட்டுநரையும் 51 வயது பெண் பயணியையும் மீட்டு கூ டெக் புவாட் மருத்துவமனையில் சேர்த்தனர். இருவரும் சுயநினைவுடன் காணப்பட்டதாக போலிசார் கூறினர்.
இதற்கிடையே விபத்தை நேரில் பார்த்த சிலர் புகைப்படம் எடுத்து ஸ்டோம்ப் இணையத்தளத்தில் பதிவேற்றியிருந்தனர். அதில் சிவப்பு நிற கார் ஒன்று கால்வாயில் விழுந்துகிடந்ததைக் காண முடிந்தது. இரும்புத் தடுப்பு ஒன்றும் காருக்கு அடியில் காணப்பட்டது.

