ஒரே வாரத்தில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களால் நிகழும் இரண்டாவது தீச்சம்பவம் நேற்று அங் மோ கியோ வீவக வீடு ஒன்றில் ஏற்பட்டது. அங் மோ கியோ அவென்யூ 1ன் புளோக் 224ல் நான்காவது மாடி வீவக வீடு ஒன்றில் நெருப்பு மூண்டிருப்பது குறித்து பிற்பகல் 3.05 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது தீ கட்டுக்கடங்காத அளவில் இருந்ததாகவும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீக்கு இரையாகியிருந்ததாகவும் கூறப்பட்டது.
ஒரு நீர் பீய்ச்சுக் குழாயைக் கொண்டு அதிகாரிகள் நெருப்பை அணைத்தனர். தீயால் பாதிக்கப்பட்ட வீட்டின் பக்கத்து வீட்டிலிருந்து ஒரு பெரியவரும் மூன்று பிள்ளைகளும் மீட்கப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 60 பேர் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.சமையலறையில் இருந்த தனிநபர் நடமாட்டச் சாதனத்தால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணைவழி தெரிய வந்துள்ளது.

