ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மரினா பே சேண்ட்ஸிலுள்ள குறிப்பிட்ட சுற்றுலாத் தளங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் 80க்கும் மேற்பட்ட அறநிறுவனங்களுக்கு நிதி திரட்ட உதவுவர். ‘ஆர்ட்சைன்ஸ்’ அரும்பொருளகம், ‘சேண்ட்ஸ் ஸ்கைபார்க் ஆப்சர்வேஷன் டெக்’, ‘த சம்பான் ரைட்ஸ்’, ‘டிஜிட்டல் லைட் கேன்வஸ்’ ஆகிய இடங்களுக்குச் செல்வோர் அவற்றுக்கான நுழைவுச்சீட்டுகளுக்குச் செலவு செய்யும் பணம் நன்கொடை அமைப்புகளுக்கு அளிக்கப்படும்.
ஏழாவது முறையாக நடைபெறும் ‘சேண்ட்ஸ் ஃபோர் சிங்கப்பூர்’ அறநிறுவன விழாவில் இந்நடவடிக்கை அங்கம் வகிக்கிறது. இந்த ஒருங்கிணைந்த உல்லாசத்தளத்தின் சமுதாயப் பொறுப்பு திட்டத்தின்கீழ் நடத்தப்படும் இந்த விழா மூலம் 2013ஆம் ஆண்டிலிருந்து 23 மில்லியன் வெள்ளிக்கு மேல் திரட்டப்பட்டுள்ளது. இந்த மூன்று நாள் விழாவை நிறைவு செய்யும் நிகழ்வாக ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி நடைபெறும் ‘ஸ்கை வர்ட்டிக்கல்’ நெடுந்தொலைவு ஓட்டம் அமையவுள்ளது.
இந்த நன்கொடை விழாவின் ஓர் அங்கமாக ‘சேண்ட்ஸ் ஃபோர்’ சிங்கப்பூர் குறும்படக் காணொளித் தொடரை மரினா பே சேண்ட்ஸ் இவ்வாண்டு வெளியிட்டுள்ளது.
‘மூளை முடக்குவாத கூட்டுறவு சிங்கப்பூர்’ அமைப்பின்மீது கவனம் செலுத்துகிறது இந்தத் தொடரின் முதல் காணொளி. சக்கர நாற்காலிகளுக்கு இடம் உள்ள ஒரு பேருந்து ஓட்டுநரின் கதையை அந்தக் காணொளி சித்தரிக்கிறது. 2018ஆம் ஆண்டில் அந்த அமைப்புக்கு மரினா பே சேண்ட்ஸ் வழங்கிய 160,000 வெள்ளி நன்கொடையால் இந்தப் பேருந்தை வாங்குவது அமைப்புக்குச் சாத்தியமானது.
நன்கொடை விழா நிகழும்போது மேல் கூறப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்காகப் பொதுமக்கள் ‘கம்யூனிட்டி செஸ்ட்’ இணையத்தளத்தில் பதிவு செய்யலாம்.