டல்விச் காலேஜ் ஷங்ஹாய் அனைத்துலகப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியரான பிரிட்டனைச் சேர்ந்த டேமியன் மைக்கல் ஷார்னோக், 60, போதைப்பொருள் புழக்கம் தொடர்பான ஐந்து குற்றச்சாட்டுகளை இங்குள்ள நீதிமன்றத்தில் எதிர்நோக்குகிறார். ‘ஐஸ்’ போதைப்பொருளை உட்கொண்டதாக அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டும் அவற்றில் அடங்கும்.
புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 8ல் உள்ள டல்விச் காலேஜ் பள்ளியின் சிங்கப்பூர் கிளையிலும் ஷார்னோக் முன்னதாக பணிபுரிந்திருந்தார். இவ்வாண்டு மார்ச் 5ஆம் தேதி அவர் போதைப்பொருள் குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது. ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தவிர்த்து, ‘எக்ஸ்டசி’ எனும் போதைப்பொருளை ஷார்னோக் உட்கொண்டதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.
பால்மோரல் ரோட்டில் உள்ள குட்வுட் கிராண்ட் கொன்டோமினிய வீட்டில் அவரிடம் 11 பாக்கெட்டுகளில் அடங்கிய போதைப்பொருள் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், ஷார்னோக்கிடம் ஏழு மாத்திரைகளும் போதைப்பொருள் உட்கொள்ள உதவும் சாதனங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த வழக்கில் வழக்கறிஞர் ஒருவரால் பிரதிநிதிக்கப்படும் ஷார்னோக் $10,000 பிணையில் நேற்று விடுவிக்கப்பட்டார். அவரது வழக்கு அடுத்த மாதம் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.