குளிரூட்டி சாதனங்களின் தேவை இன்றி எதிர்காலத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் குடியிருப்பாளர்கள் குளிர்ந்த சூழலை அனுபவிக்கலாம். அத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட அறிவார்ந்த கட்டமைப்பு, வீவக வீடுகளை அதிக வசதியுடையதாக்கலாம்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் ‘இவொனிக்’ நிறுவனமும் இதன் தொடர்பில் நேற்று நடைபெற்ற நகர நிலைத்தன்மைக்கான ஆராய்ச்சி, மேம்பாட்டு மாநாட்டின்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
வெப்பத்தைக் கட்டுப்படுத்த கட்டடங்களின் கூரைப்பகுதியில் பொருத்தப்படும் காப்புப் பொருள் அதிக செயல்திறன் பெற்றதாக இருக்கும். இந்த முறையை வீவக வீடுகளில் அமைக்கும் சாத்தியத்தை இரு தரப்புகளும் ஆராய்ந்து வருகின்றன.
வீட்டின் உட்புறத்தில் உள்ள வெப்பநிலையை இரண்டு டிகிரி செல்சியஸ் குறைப்பதே இதன் நோக்கம்.
ஏற்கெனவே இந்தக் காப்புப் பொருள் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, லண்டன் ஆகிய இடங்களில் உள்ள கட்டடத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனை வீவக கட்டடங்களின் கூரைகளில் பயன்படுத்துவது குறித்த ஆய்வு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.
சோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால், இந்த முறை வீவக கட்டடங்களின் மற்ற பகுதிகளிலும் குடியிருப்பாளர்களின் வசதி கருதிப் பயன்படுத்தப்படும்.
அத்துடன் கட்டுமானத்தில் முப்பரிமாண கான்கிரீட் அச்சிடுதலைப் பயன்படுத்தும் சாத்தியத்தையும் வீவகவும் ‘இவொனிக்’கும் ஆராய்ந்து வருகின்றன.
இதனால் வீடுகளைக் கட்டச் செலவிடப்படும் நேரம் குறையும். மேலும் வீடுகளை வாங்குவோருக்கும் வடிவமைப்பு தொடர்பாக மேலும் அதிகத் தெரிவுகள் அளிக்கப்படும்.
தற்போது வீட்டு உருவாக்கத்திற்குக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை ஆகும். ஆனால் இப்புதிய முறையால் அச்சுகளை உருவாக்கத் தேவை இருக்காது.
அத்துடன் வழக்கமான முறையில் உருவாக்கப்படும் முறையில் ஊழியர்களை நம்பியிருப்பதை முப்பரிமாண அச்சுமுறை குறைக்கும்.
அத்துடன் ஊழியர் எண்ணிக்கையில் ஏற்படக்கூடிய தட்டுப்பாட்டையும் இது சமாளிக்கும் வகையில் அமைந்திடும்.
மற்றுமோர் ஆய்வுக்கான ஒப்பந்தத்தில் வீவக, ‘வீ-கீ’ நிறுவனத்துடன் கையெழுத்திட்டது. வீவகவின் தற்போதைய அறிவார்ந்த இல்லச் சூழலை இது மேம்படுத்தும் வகையில் அமையும். வெவ்வேறு சாதனங்களை ஒரே இயக்க முறையைப் பயன்படுத்திச் செயல்படச் செய்யலாம். இதில் அறிவார்ந்த விளக்குகள், அசைவு உணர்திறன் சாதனங்கள், அறிவார்ந்த சன்னல் திரைகள் ஆகியவை அடங்கும்.
மேலும் முதியவர்கள் வசிக்கும் வீடுகளில் கண்காணிப்புச் சாதனத்தைப் பொருத்தவும் வீட்டு உரிமையாளர்கள் தேர்ந்தெடுக்கலாம்.
வீட்டில் உள்ள அசைவு உணர்திறன் கருவிகள், முதியவர்களின் அசைவுகளைக் கண்காணிக்கும். அன்றாட நடவடிக்கைக்கு மாறாக ஏதேனும் தென்பட்டால் முதியவரின் உறவினருக்கோ பராமரிப்பாளருக்கோ உடனே தகவல் தெரிவிக்கப்படும்.
இரண்டு நாள் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங். ஆய்வு மற்றும் மேம்பாடு தொடர்பில் நகரங்களுக்கான தீர்வுகள் காண, அரசு மேலும் அதிக நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என்று திரு வோங் தெரிவித்தார்.