இஸ்தானா பூங்காவில் வேலை பார்த்துக்கொண்டிருந்த துப்புரவுப் பணியாளர் இளங்கோவன் மாரிமுத்து கையெறி குண்டைப் போல் தோற்றமளிக்கும் விளையாட்டுப் பொருளைக் கண்டெடுத்து அதனைப் பலரும் பார்க்கும்படி நேர்கோணலாக அங்கு வைத்திருந்தார்.
அந்தக் கையெறி குண்டைக் கண்டு திடுக்கிட்டுப் போன வாகனமோட்டி ஒருவர் உடனே போலிசாரை அழைத்தார். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 39 அதிகாரிகள் கையெறி குண்டு காணப்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
இதனால் பினாங்கு லேன் சாலையின் ஒரு பகுதி கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மூடப்பட்டது. அதில் அரை மணி நேரத்திற்கு அந்தச் சாலை முற்றிலும் மூடப்பட்டது. அந்தக் கையெறி குண்டால் எந்த ஆபத்துமில்லை என்று அதிகாரிகள் உறுதி செய்ததை அடுத்து, மாலை ஐந்து மணிக்கு அந்தச் சாலை மீண்டும் திறக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது. இந்தக் குழப்பத்திற்கெல்லாம் காரணமாக இருந்த 59 வயது இளங்கோவன் மாரிமுத்துக்கு 4,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. இளங்கோவனின் குற்றத்தால் பொதுவளங்கள் விரயமாக்கப்பட்டதாக அரசுதரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.