சிங்கப்பூரின் ஹோட்டல் அறைக் கட்டணங்கள், பெரிய அளவிலான சில முதலீடுகளுக்கு அடுத்து 2020ஆம் ஆண்டுக்குள் 2 விழுக்காடு உயரும் என்று ‘அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஜிபிடி’ பயண நிர்வாக நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
சாங்கி விமான நிலையம், ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா ஆகியவற்றுக்கான பல பில்லியன் டாலர் முதலீடுகளால் சிங்கப்பூரின் பயணத்துறை மற்றும் ‘மைஸ்’ எனப்படும் சந்திப்புகள், அனுகூலங்கள், கலந்துரையாடல்கள், கண்காட்சிகள் ஆகியவை ஏற்றம் காணும் என்று ‘அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஜிபிடி’, அடுத்தாண்டுக்கான தனது ஹோட்டல் மானிட்டர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தற்போது சீராக இருக்கும் ஹோட்டல் அறைகளுக்கான கட்டணங்கள், எதிர்பார்த்தது போல் 2 விழுக்காடு உயரும் என்றும் ஜிபிடி சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்திற்கான பொது நிர்வாகி சங்கமித்ரா போஸ் தெரிவித்தார்.
ஆசிய-பசிஃபிக் வட்டாரத்தில் ஹோட்டல் அறைக் கட்டணங்கள் அதிகரிக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் ஆக அதிகமாக 5 விழுக்காடு உயர்வு, தோக்கியோவில் 4 விழுக்காடு உயர்வு, ஹாங்காங்கில் 3 விழுக்காடு உயர்வு ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது. பேங்காக், ஹோ சி மின் சிட்டி, கோலாலம்பூர், மெல்பர்ன், ஷாங்காய் ஆகிய நகரங்களில் ஹோட்டல் அறைக் கட்டணங்கள் இரண்டு விழுக்காடு உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.