இவ்வாண்டு பாடாங்கில் நடைபெறும் தேசிய நாள் அணிவகுப்பில் இதுவரை இல்லாத அளவு பிரம்மாண்டமான காட்சிப் பொருள் இடம்பெறவிருக்கிறது.
ஆறு மீட்டர் உயர, ஆயிரம் கிலோ எடை கொண்ட மாபெரும் உலோக சிங்கம் காட்சியளிக்கும் என்று நேற்று வெளியிட்ட தகவலில் தேசிய நாள் அணிவகுப்பின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஒளி வெள்ளத்தில் மிதக்கும் சிங்கத்தை வடிவமைத்து தயாரிக்க எட்டு மாத காலமானது.
கடந்த அக்டோபர் மாதம் சிங்கத்தை வடிவமைக்கும் பணி தொடங்கியது.
தேசிய நாள் அணிவகுப்பின் காட்சியமைப்புக் குழுவின் தலைவரான கர்னல் லிம் ஹான் யோங், தெமாசெக்கில் நீல உத்தமா கால் பதித்தபோது சிங்கத்தைப் பார்த்து சிங்கப்பூரா என்று தீவுக்குப் பெயரிட்டதை காட்சி பிரதிபலிக்கும் என்றார்.
அப்போது முதல் எழுநூறு ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரின் அடையாளமாக சிங்கம் திகழ்ந்து வருகிறது.
"இவ்வாண்டு இருநூற்றாண்டு நிறைவாக இருப்பதால் நம்முடைய ஆரம்பகாலத்துக்கு இட்டுச் செல்ல நாங்கள் விரும்பினோம்," என்றார் அவர்.
தேசிய நாள் அணிவகுப்பில் இடம்பெறும் காட்சி 5க்கு 'நமது கனவுகள்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், நமது எதிர்காலத்தை ஒன்றாகச் சேர்ந்து உருவாக்கும் சிங்கப்பூரர்களின் துணிச்சலையும் நம்பிக்கையையும் விடாமுயற்சியையும் காட்டும் விதமாக வெள்ளி நிறத்தில் சிங்கம் தோன்றும் என்று கர்னல் லிம், 39, தெரிவித்தார்.

