சிங்கப்பூரில் உயிரை மாய்த்துக்கொள்ளும் பதின்ம வயது ஆண்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு புதிய உச்சத்தைத் தொட்டது. பத்து முதல் 19 வயது வரையிலான 19 ஆண்கள் கடந்த ஆண்டு உயிரை மாய்த்துக்கொண்டனர்.
ஒவ்வோர் ஆண்டும் உயிரை மாய்த்துக்கொள்வோரின் எண்ணிக்கை 1991ஆம் ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கடந்த ஆண்டுதான் மேற்கூறப்பட்ட வயதுப் பிரிவில் ஆக அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
2017ஆம் ஆண்டில் பதின்ம வயது ஆண்கள் எழுவர் உயிரை மாய்த்துக்கொண்டனர். கடந்த ஆண்டு உயிரை மாய்த்துக்கொண்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கையும் 397ஆக அதிகரித்தது. 2017ல் அந்த எண்ணிக்கை 361ஆக இருந்தது. குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையம் இந்த வருடாந்திர புள்ளிவிவரங்களை வெளியிட்டதையடுத்து, வயது அடிப்படையில் உயிரை மாய்த்துக்கொள்வோரின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்களை சிங்கப்பூர் அபய ஆலோசனை மன்றம் இன்று வெளியிட்டது.
அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களைத் தவிர்த்து, அனைத்து வயது பிரிவுகளிலும் உயிரை மாய்த்துக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் 100,000 பேரில் உயிரை மாய்த்துக்கொள்வோரின் விகிதம் கடந்த ஆண்டு 8.36 என்ற எண்ணிக்கையாக பதிவானது. 2017ல் அந்த விகிதம் 7.74ஆக இருந்தது.

