துப்பாக்கிக்காரர்கள் திடீர் தாக்குதல்; காவல்துறை பதிலடி

துப்பாக்கிக்காரர்கள் திடீர் தாக்குதல்; காவல்துறை பதிலடி

2 mins read
e132e957-e187-4b67-a85b-0bbed10a7bfc
கத்தியைக் காட்டி மிரட்டிய ஆசாமியிடமிருந்து பயணியை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொதுப் போக்குவரத்து பாதுகாப்புத் தளபத்தியத்தின் அதிகாரிகள். சிட்டி ஹால் எம்ஆர்டி நிலையத்தில் இந்தப் பாவனைப் பயிற்சி நேற்று நடைபெற்றது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இவ்வாண்டு தேசிய தின அணி வகுப்பு நடைபெறும் அதே பாடாங் அரங்கிற்குள் நேற்று நுழைந்த துப்பாக்கிக்காரர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்து நாலாபக்கமும் சிதறி ஓடினர்.

இதனால் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

ஆனால் இது ஒரு பாவனைப் பயிற்சிதான்.

பெரிய அளவில் நடைபெற்ற இந்த பாவனைப் பயிற்சியில் பார்வையாளர்களை நோக்கி துப்பாக்கிக்காரர்கள் சுடத் தொடங்கினர்.

உடனே சிங்கப்பூர் போலிஸ் படையைச் சேர்ந்த அவசரகால பதில் நடவடிக்கைக் குழுவும் உடனடி பதில் நடவடிக்கை குழுவும் துப்பாக்கிகாரர்களுக்கு பதிலடித் தந்தது.

இந்த மிரட்டலை காவல் படையினர் சமாளித்துக் கொண்டிருந்த சமயத்தில் அக்கம்பக்கத்தில் மேலும் நான்கு துப்பாக்கிக்காரர்கள் தலைகாட்டினர்.

அடுத்த நிலையில் இருந்த கூர்க்கா படை, அதிவேக நடவடிக்கைப் படை, சிறப்பு உத்தி மற்றும் மீட்புப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் களத்தில் இறங்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையடுத்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவிகளை செய்தனர்.

நேற்று நடைபெற்ற இந்த பாவனைப் பயிற்சியில் ஆயுதம் ஏந்திய தாக்குதலைச் சமாளிக்கும் காவல் துறையின் ஆற்றல் சோதிக்கப்பட்டது.

கிளமெண்டி காவல் நிலையம், பொதுப் போக்குவரத்து பாதுகாப்பு தளபத்தியம், சிறப்பு செயலாக்கத் தளபத்தியம், கூர்க்கா படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

தேசிய தின அணிவகுப்பு நடைபெற ஒரு வாரமே உள்ள நிலையில் இப்பயிற்சி நடந்துள்ளது.

இதற்கிடையே இந்த பாவனைப் பயிற்சியை நேரில் பார்வையிட்ட சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், சிங்கப்பூரின் முத்திரையைப் பதிக்கும் வகையில் நடக்கும் தேசிய நாள் தின வகுப்புக்கு தீவிரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நேற்று சிட்டி ஹால் எம்ஆர்டி நிலையத்திலும் பாவனைப் பயிற்சி நடைபெற்றது.

இதில் கத்தியைக் காட்டி மிரட்டிக் கொண்டிருந்த இருவரை பொதுப் போக்குவரத்து பாதுகாப்புத் தளபத்தியத்தின் வீரர்கள் மடக்கினர். அப்போது கத்தியுடன் இருந்த ஆசாமி, பயணி ஒருவரை பிணை பிடித்துக்கொண்டார்.

ஆனால் காவல்துறை பதில் நடவடிக்கையில் இறங்கி அந்தப் பயணியைப் பாதுகாப்பாக விடுவித்தது.

மேலும் பேசிய அமைச்சர் சண்முகம், ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்வதால் பாடாங்கைச் சுற்றியுள்ள ஏழு எம்ஆர்டி நிலையங்களையும் பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தினார்.

சிங்கப்பூருக்குள் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் காவல்துறை முதன்மை பங்கை ஆற்றும் என்று கூறிய திரு சண்முகம், காவல்துறையின் தேவைக்கு ஏற்ப சிங்கப்பூர் ஆயுதப் படைகள் ஆதரவுச் சேவைகளை வழங்கும் என்றார்.