சிங்கப்பூர் சமரச உடன்படிக்கையில் கையெழுத்திட 70 நாடுகளின் பேராளர்கள் புதன்கிழமை (ஆகஸ்ட் 7) சிங்கப்பூரில் கூடினார்கள். இதுபற்றி கருத்துரைத்த பிரதமர் லீ சியன் லூங், இந்த அனைத்துலக உடன்படிக்கை பன்முகத்தன்மைக்கான வலுவான ஆதரவை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
சமரசத்தின் மூலம் ஏற்படும் அனைத்துலக ஒப்பந்தங்களுக்கான உடன்படிக்கையை ஐக்கிய நாட்டு பொதுச்சபை ஏற்றுக்கொண்டு, கடந்த டிசம்பர் மாதம் உடன்படிக்கைக்கு சிங்கப்பூரின் பெயரை இட்டது. இந்த உடன்படிக்கை வணிக சமரச ஒப்பந்தங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதில் கையெழுத்திடும் நாடுகள் தத்தம் நீதிமன்றங்களில் சமரச ஒப்பந்தங்களை நிலைநாட்டவேண்டும்.
நூற்றுக்கும் மேலான பேராளர் குழுக்கள் மூன்று ஆண்டுகளாக மேற்கொண்ட அரும்பணியின் விளைவாக உடன்படிக்கை நிறைவேறியுள்ளது.
சிங்கப்பூர் சமரச உடன்படிக்கையில் 46 நாடுகள் கையெழுத்திட்டிருப்பதால், எல்லைகளுக்கு அப்பால் சமரச ஒப்பந்தங்களை நிலைநாட்டுவது எளிதாக இருக்கும்.

