பத்தொன்பதாம் நூற்றாண்டு சிங்கப்பூரின் இந்தியக் கைதி தொழிலாளர்கள் பற்றி பேசுகையில், அவர்கள் செய்த பணிகளிலேயே பொதுவாகக் கவனம் செலுத்தப்படுகிறது. அதாவது, செயின்ட் அன்ட்ரூஸ் தேவாலயம், இஸ்தானா போன்ற நினைவுச்சின்னங்களையும், நார்த் மற்றும் சவுத் பிரிட்ஜ் சாலைகள், சிராங்கூன் சாலை, கெப்பல் சாலை போன்றவற்றையும் கட்டுவதற்கு அவர்கள் ஆற்றிய பங்கு குறிப்பிடப்படுகிறது.
தண்டனைச் சட்டக் கொள்கை முற்போக்காகவும், நடைமுறைக்கேற்றதாகவும், சீர்திருத்தமானதாகவும் இருந்ததாகப் பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், இந்தியக் கைதி தொழிலாளர்களின் அனுபவம் அவ்வளவு எளிதானதாக அமையவில்லை என்கிறார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வரலாற்றாளர் ஜான் சாலமான்.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற குழுப் படைப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியபோது, கைதிகள் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டது பெரும்பாலும் கடினமான உடலுழைப்பு, மனோவியல் தண்டனையாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.
"அவர்களின் தண்டனை அவர்களுக்குப் பழக்கப்பட்ட நண்பர்கள், குடும்பத்தினர், சுற்றுப்புறம் அனைத்திலுமிருந்து அவர்களை விலக்கி எடுத்துச்சென்ற ஒருவழிப் பயணமாக அமைந்தது. அது ஒரு வகையான சமூக மரணம். தங்களது அன்புக்குரியவர்களுடன் மறுபடியும் பேசும் வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது என்றே அவர்கள் பெரும்பாலும் எதிர்பார்த்தனர்."
இந்தக் குழு கலந்துரையாடலில், தேசிய பல்கலைக்கழக வரலாற்றாளர் நூர்ஃபட்சிலா யஹாயா, மலாய் மரபுடைமை நிலைய ஆய்வாளர் ஹோ சீ டிம் ஆகியோரும் பங்கெடுத்தனர்.
குடியேற்றச் சமூகங்கள் பற்றி அதிகமாக அறியப்படாத கதைகள் கலந்துரையாடலில் கலந்து பேசப்பட்டன. இந்தியக் கைதிகள் தங்களது தண்டனையை நிறைவேற்ற 1825 முதல் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டனர்.
பணத்தட்டுப்பாட்டை எதிர்நோக்கிய காலனித்துவ ஆட்சியின் ஊழியர் பற்றாக்குறையைப் போக்க அவர்கள் உதவியாக இருந்தனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் குடியேற்றத்தின் முக்கிய கைதி மையமாக இருந்த சிங்கப்பூரில், 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் மரண விகிதம் ஆக அதிகமாக இருந்ததாக டாக்டர் சாலமன் சுட்டிக்காட்டினார். சில ஆண்டுகளில், கைதிகளின் மரண விகிதம் பினாங்கு, மலாக்கா ஆகியவற்றைவிட சிங்கப்பூரில்தான் அதிகமாக இருந்தது.
இதன் காரணமாக, ஸ்ட்ரெய்ட்ஸ் குடியேற்றத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் 200 கைதிகள் வரவழைக்கப்பட்டும், சிங்கப்பூரிலிருந்த கைதிகளின் எண்ணிக்கை பெரும்பாலான ஆண்டுகளில் ஆயிரத்திற்குச் சற்று அதிகமாக நிலையாக இருந்தது.
மனச்சோர்வும் தாயகம் பற்றிய ஏக்கமும் மரணத்திற்கான காரணங்களாகக் காலனித்துவ நிர்வாகிகளால் பதிவு செய்யப்பட்டன. ஆனால், மோசமான சூழ்நிலைகளை மூடிமறைக்க இக்காரணங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார் டாக்டர் சாலமன்.
பிற்பாடு, சிங்கப்பூரில் குடியேறிய ஐரோப்பிய சமூகத்தின் குறைகூறலைத் தொடர்ந்து, கைதிகளைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தும் நடைமுறை படிப்படியாக நிறுத்தப்பட்டது.
கைதித் தொழிலாளர்கள் பொது இடங்களில் தென்படுவதை ஐரோப்பிய சமூகம் விரும்பவில்லை என்றும், நகர்ப்பகுதியில் கைதிகளால் ஐரோப்பியர்களின் பாதுகாப்புக்கு உத்தேச மிரட்டல் இருப்பதாக அவர்கள் கருதியதாகவும் அவர் சொன்னார்.
சுமார் 60 பேர் கலந்துகொண்ட கலந்துரையாடல், சிங்கப்பூர் அதன் வரலாற்றைப் பற்றிய கண்ணோட்டத்தை எவ்வாறு மாற்றி வருகிறது என்பதைச் சுருக்கமாக ஆராய்ந்தது.

