தொடக்கக் கல்லூரிகளில் சிறந்த நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை மட்டுமே சேர்த்துக்கொண்ட சிங்கப்பூரின் முதல் இரண்டு சட்டப் பள்ளிகள் அண்மையில் அடுத்த நிலையில் உள்ள மாணவர்களையும் சேர்த்துக் கொள்ள முன்வந்தன.
இந்த நிலையில் சிங்கப்பூரின் 3வது புதிய சட்டப்பள்ளி, பலதுறை தொழில் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறது.
கடந்த 2016ல் 'எஸ்யுஎஸ்எஸ்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் புதிய சட்டப் பள்ளி தொடங்கப்பட்டது.
அப்போது முதல் இவ்வாண்டு வரை அதிக பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களை அது சேர்த்து உள்ளது.
இவ்வாண்டு அந்த சட்டப்பள்ளியில் பலதுறைத் தொழில் கல்லூரியைச் சேர்ந்த 21 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்ட னர். கடந்த ஆண்டு இளநிலை பட்டப்படிப்புக்கான மொத்தம் உள்ள 63 இடங்களில் 21 இடங்கள் பலதுறைத் தொழில்கல்லூரி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.
எஸ்யுஎஸ்எஸ் சட்டப் பள்ளியில் மாணவர்களின் சராசரி வயது முப்பதுகளில் உள்ளது.
குற்றவியல் வழக்கறிஞர்கள், குடும்ப நல வழக்கறிஞர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த 3வது சட்டப்பள்ளி தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் மாணவர்களின் சேர்க்கையை அடுத்த ஆண்டு 75க்கு உயர்த்த அது திட்டமிட்டுள்ளது.
இதர பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் பலதரப்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
ஆலோசகர்கள், துணை சட்ட ஊழியர்கள், போலிஸ், சிறை அதிகாரிகள், சமூக சேவை ஊழியர்கள் போன்ற வேலை செய்யும் ஊழியர்களும் இங்கு சட்டம் பயின்று வருகின்றனர்.

