உட்லண்ட்ஸ் அவென்யூ 6 புளோக் 677ன் தரைத்தளத்தில் உள்ள குப்பை போடும் இடத்தில் 64 வயது முதியவரின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் குறித்து தங்களுக்கு பிற்பகல் 12.05 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் அந்த முதியவர் சுயநினைவின்றி கிடப்பதைக் கண்டனர். அவரைச் சோதித்துப் பார்த்த துணை மருத்துவ அதிகாரிகள் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கை வகைப்படுத்தி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவரின் உடல் இருந்த இடத்தைச் சுற்றி போலிசார் தடுப்பு போட்டதாக அவ்வழியாகச் சென்ற புகைப்படக் கலைஞர் திருவாட்டி விவியன் லோ தெரிவித்தார்.
காலையில் அந்த வட்டாரத்தின் துப்புரவாளர்கள் குப்பையை அகற்ற அந்த இடத்தின் கதவைத் திறந்தபோது முதியவர் சுயநினைவின்றி கிடப்பதைப் பார்த்தனர் என்று தமக்குத் தகவல் கிடைத்ததாக 29 வயது திரு லோ தெரிவித்தார்.
நேற்று மாலை நிலவரப்படி முதியவர் பற்றிய விவரங்களைப் பற்றியும் அவர் இறந்ததற்கான காரணம் பற்றியும் போலிசார் வெளியிடவில்லை.

