கணினிச்சில்லுகளுக்கான உலகளாவிய தேவை நீண்டகாலப் போக்கில் வலுவாக இருந்து வரும் என்றும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் நல்ல நிலையில் சிங்கப்பூர் இருப்பதாகவும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.
நிதி அமைச்சருமான திரு ஹெங், உட்லண்ட்சில் நார்த் கோஸ்ட் டிரைவில் மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்தின் புதிய விரிவுபடுத்தப்பட்ட கணினிச்சில்லு தயாரிப்பு நிறுவன திறப்பு விழாவில் நேற்று உரையாற்றினார்.
இந்த விரிவாக்கம் காரணமாக புதிதாக 1,000 க்கும் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிகிறது. மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்தில் சுமார் 8,000 பேர் வேலை பார்க்கிறார்கள்.
உலகச் சந்தை நிச்சமில்லாமல் இருப்பதால் உலகளாவிய கணினிச் சில்லு தொழில்துறை பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது என்பதில் ஐயமில்லை என்று கூறிய துணைப் பிரதமர், கடந்த சில ஆண்டுகளில் இந்தத் தொழில்துறை 35 விழுக்காட்டிற்கும் மேம்பட்ட வளர்ச்சி கண்டு வந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
கணினிச்சில்லுக்கான உலகளாவிய தேவை 2020ல் மிதமான நிலைக்குத் திரும்பும். பிறகு அது 2 விழுக்காடு முதல் 9 விழுக்காடு வரை வளர்ச்சி காணும் என்று அண்மையில் முன்னுரைக்கப்பட்டு இருப்பதை திரு ஹெங் சுட்டினார்.
மின்னணுப் பொருட்களுக்கு, குறிப்பாக கணினிச் சில்லுகளுக்கு உலகளாவிய தேவை மெதுவடைந்து வருவதால் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சிங்கப்பூரின் கணினிச்சில்லு ஏற்றுமதிகள் 14.6% குறைந்து இருக்கின்றன.
இந்தச் சூழலில் திரு ஹெங் நம்பிக்கை ஊட்டும் தகவலைத் தெரிவித்து உள்ளார். கணினிச் சில்லுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்று நம்புவதற்கு பல காரணங்கள் இருப்பதாக அவர் கூறினார்.
நவீன கைத்தொலைபேசிகள், தொடுதிரைச் சாதனங்கள் ஒருபுறம் இருக்க, தொலைக்காட்சி பெட்டிகள் முதல் அணிந்துகொள்ளும் மின்னிலக்கப் பொருட்கள் வரை அனைத்திற்கும் பயனீட்டாளர்களிடம் மோகம் அதிகரித்து வருவதை துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
5 ஜி, மனித இயந்திரம் போன்ற புத்தாக்கத் தொழில்நுட்பங்கள் புதிது புதிதாக முன்னேற்றம் கண்டு வருவதும் கணினிச் சில்லு தொழில்துறை வளர்வதற்கு காரணம் என்றார் அவர்.
கணினிச் சில்லுகளைப் பொறுத்தவரையில் உலகச் சந்தையில் 11 விழுக்காட்டை சிங்கப்பூர் தக்கவைத்துக்கொண்டு வருகிறது. 60க்கும் அதிக கணினிச் சில்லு நிறுவனங்கள் சிங்கப்பூரில் செயல்படுகின்றன.
உற்பத்தித் துறையில் ஆகப் பெரிய தொழில்துறைகளில் ஒன்றான அது, ஏறக்குறைய 35,000 பேருக்கு வேலை கொடுக்கிறது.
சிங்கப்பூர், கணினிச்சில்லுக்கான உலகளாவிய தேவையைக் கருத்தில்கொண்டு அந்தத் தேவையை நிறைவேற்றி வைக்க ஆயத்தமாக இருக்கிறது என்று தெரிவித்த திரு ஹெங், சிங்கப்பூர் கணினிச்சில்லு மையமாகத் திகழ ஏற்புடைய நிலையில் தொடர்ந்து இருந்துவர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு நல்ல தொடர்புகளைக் கொண்ட வலுவான அடிப்படைகள், தொழில் நடத்துவதற்கு ஏதுவான சூழல், ஆற்றல்மிக்க, காலத்திற்கேற்ப மாறிக்கொள்ளும் ஊழியர் அணி தேவை என்றார் அவர்.