தொண்டூழிய சமூகநல அமைப்பான ‘க்ரைசிஸ் சென்டர்’, அடுத்த ஆறு மாதங்களுக்கு நிதி திரட்டு நடவடிக்கைகளில் ஈடுபட அறநிறுவன ஆணையாளர் (சிஓசி) தற்காலிகத் தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
அமைப்பின் நிதித் திரட்டு நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நலன் கருதித் தற்காலிகத் தடை நேற்று முதல் நடப்புக்கு வந்தது.
தொண்டு, ஈகை, கொடை தொடர்பில் கோரப்படும் அனைத்து நிதி திரட்டு நடவடிக்கைகளுக்கும் இந்தத் தடை உத்தரவு பொருந்தும் என்று கூறப்பட்டது.
இருப்பினும் இந்த ஆறு மாத காலத்தில் நிலையம் தன் அன்றாடப் பணிகளைத் தொடரலாம் என்றும் சிஓசி தெரிவித்தார்.
சென்ற ஆண்டு ஜனவரி 16ஆம் தேதியன்று ‘க்ரைசிஸ் சென்டர்’, ஒரு சங்கமாக நிறுவப்பட்டது. பின்னர் அதே ஆண்டில் மே 9ஆம் தேதியன்று அதற்கு அறநிறுவனம் என்ற தகுதி வழங்கப்பட்டது.
வீடில்லாமல் தவிக்கும் ஆண்களுக்கும் ஆதரவை இழக்கும் அபாயத்தில் இருக்கும் ஆண்களுக்குமான இடைக்கால தங்குமிடத்தைத் தருவதே இந்த அமைப்பின் நோக்கம்.
இதுவரை அமைப்பு மேற்கொண்டுள்ள நிதி திரட்டு கோரிக்கைகள் தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலின்படி அமைப்பின் நிர்வாகம், பதிவு வைத்துக்கொள்ளும் முறை, நன்கொடையாளர்களுக்கு அமைப்பின் கடப்பாடு ஆகியவற்றின் தொடர்பில் சந்தேகத்திற்குரிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அறநிறுவன ஆணையாளரான டாக்டர் அங் ஹக் செங் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் அறநிறுவனங்கள் சட்டத்தின்படி நிதி திரட்டு தொடர்பில் அமைப்புக்குத் தற்காலிகத் தடை விதிப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் ஆணையாளர் விவரித்தார்.
இந்நிலையில் நிதி திரட்டுவதன் தொடர்பில் யாரேனும் அணுகினால் உடனே நன்கொடை அளிக்கவேண்டும் என்ற அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம் என்று சிஓசி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் நன்கொடை அளிப்பதற்குமுன் ‘கேள்வி கேள், சரிபார்த்துக்கொள், கொடு’ என்ற மூன்று படிகளைக்கொண்டு முடிவெடுத்துச் செயல்படுமாறு பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.