ஆசியாவின் வளர்ந்துவரும் உள்கட்டமைப்பு தேவைகளைப் பூர்த்திசெய்ய, பொதுத்துறை நிதி வழங்கும் தற்போதைய விகிதம் போதாது என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் உள்கட்டமைப்பு செலவினத்தில் அரசாங்கம் 90 விழுக்காடு நிதி வழங்குகிறது. மாறாக, வளர்ந்துவரும் சந்தைகளில் அரசாங்கத்தின் நிதி வழங்கீடு 70 விழுக்காடாகவும் உலகம் முழுவதும் அது 40 விழுக்காடாகவும் இருப்பதை அவர் சுட்டினார்.
சிங்கப்பூர் வட்டார உள்கட்டமைப்பு உச்சநிலை மாநாட்டில் நேற்று கலந்துகொண்டு பேசியபோது குமாரி இந்திராணி இந்தத் தகவலை முன்வைத்தார்.
நிதி வழங்கீட்டில் இடைவெளியைக் குறைக்க தனியார் துறையிலிருந்து அரசாங்கங்கள் முதலீடுகளை நாடுவதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், இந்த இடைவெளியைக் குறைப்பதில் பல சவால்கள் உள்ளன. உலகின் பல பகுதிகளில் நிலவும் நெருக்கடிநிலை, உள்கட்டமைப்பு மேம்பாடுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்த அக்கறை, உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகள் செய்து எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்காதது உள்ளிட்டவை அந்த சவால்களில் சில.
இத்தகைய சவால்களை எதிர்கொண்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நிதி வழங்குவதை ஊக்கமளிக்க எடுக்கப்படக்கூடிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து குமாரி இந்திராணி எடுத்துரைத்தார்.
முதலீடுகள் உடைய திட்டங்களை வகுக்க தனியார் துறையுடன் இணைந்து அரசாங்கம் பணியாற்ற வேண்டும் என்று கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி கூறினார்.
உள்கட்டமைப்பு திட்ட மேம்பாடுகள் மற்றும் முதலீடுகளை ஒருங்கிணைப்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தித் தர சட்ட ரீதியான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பது தேவை என்று அவர் குறிப்பிட்டார். ஏனெனில், பங்குதாரர்களுக்கும் நிதி வழங்கும் அமைப்புகளுக்கும் அவை எதிர்கொள்ளக்கூடிய அபாயங்கள் குறித்து உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி வழங்கும் முறையும் தாக்குப்பிடிக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
நிதி வழங்கும் முறையில் நிலவும் பெரும்பாலான சவால்கள் குறுகியகாலம் மட்டுமே நீடிக்கும் என்ற குமாரி இந்திராணி, உள்கட்டமைப்பு மேம்பாட்டின் மூலம் நீண்டகால அனுகூலங்கள் கிடைக்கவிருப்பதாகச் சொன்னார்.